3 பேரை துடிக்க துடிக்க கொன்ற காட்டு யானை.. பதறிப்போன ஓசூர்.. மயக்க ஊசி போட்டு மடக்கிய வனத்துறையினர்
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே 3 பேரை கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர் வனத்துறையினர்.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப் பகுதிகளில் 3 பேரை அடுத்தடுத்து கொன்றது ஒரு காட்டு யானை. 4 பேரை காயப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி சுற்றித்திரிந்தது.
இந்த ஒற்றை காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகள் எடுத்தனர்.'
சனமாவு வனப்பகுதி
ஒரு வழியாக, ஒற்றை யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இந்த காட்டுயானையை அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட அவர்கள் முடிவு செய்துள்ளனர். அப்படி என்னதான் நடந்தது.... இதோ ஒரு பிளாஷ் பேக். ஒசூர் அருகேயுள்ள சனமாவு வனப்பகுதியில் ஒற்றை காட்டுயானை தனியாக சுற்றித்திரிந்து வந்தது. இந்த காட்டுயானை அருகிலுள்ள போடூர், ராமாபுரம், ஆழியாளம், பீர்ஜேப்பள்ளி, சனமாவு, பென்னிக்கல், டி.கொத்தப்பள்ளி ஆகிய கிராமப்பகுதிகளில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்ததோடு அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வந்தது.
மயக்க ஊசி
தொடர்ந்து ஒசூர் சுற்றுப்புற பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இந்த ஒற்றை காட்டுயானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக வனத்துறையினர் அனுமதியை பெற்று காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தும் பணிகளில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வந்தனர்.
பிடிபட்டது
ஆனால் இந்த ஒற்றை காட்டுயானை வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் தப்பி டிமிக்கி கொடுத்து வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு வனத்துறை மற்றும் மயக்க ஊசிகள் செலுத்தும் கால்நடை மருத்துவக்குழுவினர் திருச்சிப்பள்ளி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டுயானையை கண்காணித்து அதற்கு அடுத்தடுத்து இரண்டு மயக்க ஊசிகளை செலுத்தினர்.
வனத்திற்குள் விடுகிறார்கள்
பின்னர் அந்த காட்டுயானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனைத்தொடர்ந்து காட்டுயானையை வனத்துறைக்கு சொந்தமான லாரியில் அதனை ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.