தொடங்கிய நுங்கு அறுவடை.. உள்ளூர்களில் களைகட்டும் விற்பனை.. ஆர்வம் காட்டும் மக்கள்!
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் பல மாவட்டங்களில் நுங்கு அறுவடை தொடங்கி உள்ள நிலையில், மக்கள் ஆர்வமாக நுங்குகளை வாங்கி செல்கிறார்கள். வெளியூர் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளூரில் அக்னி வெயில் சரும நோய்களில் இருந்து பாதுகாக்க பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட வட்டாரங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. தமிழகத்தில் இந்த பகுதிகளில் தான் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. அதனால் பனை நல வாரியம் தமிழக அரசு சார்பில் மத்தூர் பகுதியில் தான் ஒரு சமயத்தில் செயல்பட்டு வந்தது.

பனை மரங்களில் இருந்து பனை ஓலை பொம்மைகள், விசிறிகள், பதநீர், நுங்கு, வெல்லம் போன்ற பல பயனுள்ள பொருட்கள் கிடைப்பதால் பனை மரங்களை நம்பி இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஆண்டுத் தோறும் அக்னி வெயில் தொடக்கத்தில் இயற்கை அன்னையின் கொடையாக நுங்கு அறுவடைக்கு வரும். தற்போது அக்னி வெயில் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் அறுவடைக்கு இந்த பகுதி மக்கள் தயாராகி அறுவடை செய்து வருகின்றனர். காலை 6 மணிக்கு முன்பாக மரங்களில் இருந்து வெட்டி கீழே இறக்கி பதமான கனிகளை மூட்டையாக கட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

பேருந்து போக்குவரத்து இருக்கும் சமயத்தில் பல்வேறு மாவட்டங்கள், அருகில் உள்ள கர்நாடகா ஆந்திரா மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். தற்போது உள்ளூர் விற்பனையை மட்டுமே நம்பி சாலையோரங்களில் கூடாரம் அமைத்து விற்பனை தொடங்கி உள்ளனர். பொது மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் இதனை நம்பி உள்ளவர்கள் குறைந்த வருவாய் ஈட்டி வருகின்றனர்.
வெயில் சரும நோய்கள், உடல் சூட்டை தணிப்பது, குடல் புண்களை குணப்படுத்தும் ஆற்றல் போன்ற பல நோய்களில் இருந்து பாதுகாக்கும் இயற்கை கொடையினை ஆங்காங்கே பொது மக்கள் வாங்கி செல்வதை காண முடிந்தது.












Click it and Unblock the Notifications