வீட்டிலிருந்தே வேலை... ரூ.30,000 சம்பளம் - 650 வேலையில்லா பட்டதாரிகளிடம் கோடிக்கணக்கில் மோசடி
கிருஷ்ணகிரி: வேலை வாய்ப்புத் தருவதாக கூறி சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் 650 இளைஞரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நிறுவன உரிமையாளரை கைது செய்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
கிருஷ்ணகிரியில் கடந்த நவம்பர் மாதம் தனியார் நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று இருக்கிறது.
இதில் பங்கேற்ற கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்த பூவரசன் என்பவர் கேப்பிட்டல் பின்சர்வ் என்கிற தனியார் நிறுவனத்தில் தனது சுயவிவரப் விண்ணப்பத்தை வழங்கி இருக்கிறார்.

ரூ.5,000 முன்பணம்
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனம் ஓரிரு தினங்களில் பூவரசனை அழைப்பதாக தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அந்த நிறுவனத்தின் சார்பில் ஆன்லைன் மூலமாக நேர்காணல் நடத்தப்பட்டு பணி வழங்குவதாகவும் அதற்கு அலுவலக கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்தே வேலை
நிறுவனம் தெரிவித்த அந்த தொகையை பூவரசன் செலுத்திய நிலையில் அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மூன்று மாதங்களாக அவர் அந்த நிறுவனத்தில் வீட்டிலிருந்து பணியாற்றி வந்துள்ளார். ஆனால் அந்த நிறுவனம் கடந்த மூன்று மாதமாக சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பூவரசன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்து இருக்கிறார்.

போலீசார் விசாரணை
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் படித்து வேலையின்றி இருக்கும் இளைஞர்களை குறிவைத்து ஆசை வார்த்தைகள் கூறி வேலை வாய்ப்பு தருவதாக அவர்களிடம் போலியாக ஆன்லைனில் நேர்முகத் தேர்வுகள் நடத்தி மோசடி செய்வது தெரியவந்து உள்ளது.

கோடிக்கணக்கில் மோசடி
இவ்வாறு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோயமுத்தூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த சுமார் 650க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் வீட்டிலிருந்து வொர்க் ஃப்ரம் ஹோம் செய்துகொண்டு மாதம் ரூ.30,000 ரூபாய் ஊதியம் பெறலாம் என சொல்லி அவர்களிடம் அலுவலக கட்டணமாக ரூ.4,000 முதல் ரூ.5,000 வரையில் பணம் பெற்று மோசடி செய்து இருப்பது விசாரணையில் உறுதியானது.

உரிமையாளர் கைது
இதையடுத்து அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்ட கேப்பிட்டல் பின்சர்வின் நிறுவனர் கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை வாய்ப்புத் தருவதாக இளைஞரிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் நூதன முறையில் பணம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications