8 மாசமே ஆன பிஞ்சு..பெத்த மனசு கல்லு! போலீஸ் ஸ்டேஷனில் கதறியழுத தனம்! கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தையை காணவில்லை என தாய் காவல்நிலையத்தில் கதறி அழுது புரண்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் பெற்ற குழந்தையையே 25 ஆயிரத்துக்கு விற்றதாக தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மதுரை பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தனலட்சுமி. இருவரும் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
வெங்கடேசன் - தனலட்சுமி தம்பதியினருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் தனலட்சுமி.
குழந்தை மாயம்
அப்போது பேருந்து நிலைய கழிவறைக்கு சென்றபோது தனது குழந்தையை வெளியே வைத்துவிட்டு சென்றதாகவும் பின்னர் வந்து பார்த்த போது காணவில்லை என கிருஷ்ணகிரி போலீசில் புகார் அளித்தார். இதை எடுத்து குழந்தை மாயம் என கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
குழப்பம்
குழந்தை மாயமானது குறித்து அவரது தாயார் தனலட்சுமி இடம் விசாரணை மேற்கொண்ட போது பல குழப்பமான பதில்களை மாறி மாறி பேசி இருக்கிறார். இதனால் போலீசாரின் சந்தேகம் தனலட்சுமி மீது திரும்பிய நிலையில் அவரை காவல் நிலையத்தில் அமர வைத்துவிட்டு பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது தனலட்சுமி தனது குழந்தையை இன்னொரு பெண்ணிடம் கொடுப்பது பதிவாகி இருந்தது.
விற்பனை
இதையடுத்து தனலட்சுமியிடம் விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்த போது தான் பெற்ற குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதை ஒப்புக்கொண்டார். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரைச் சேர்ந்த உதயா சுமதி தம்பதியினருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் பெரும் விரக்தி அடைந்த சுமதி அடிக்கடி தனக்கு குழந்தை இல்லை என முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்திருக்கிறார். மேலும் ஏதாவது ஒரு குழந்தையை தான் தத்தெடுக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.
பேஸ்புக் பதிவு
இந்த பதிவை பார்த்த தனலட்சுமி தனது குழந்தை படத்தை உதயா சுமதி தம்பதிக்கு அனுப்பி வைத்து தனது குழந்தையை விற்பதாக கூறியிருக்கிறார். பலகட்ட பேரங்களுக்கு பிறகு 25 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்பது என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திற்கு வந்திருக்கிறார் சுமதி. அப்போது குழந்தையை சுமதியிடம் கொடுத்துவிட்டு 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி தனலட்சுமி வீட்டுக்கு சென்று இருக்கிறார்.
கைது
அடுத்த நாள் தனலட்சுமி தனது குழந்தை குறித்து விசாரிக்க வேண்டும் என சுமதியை தொடர்பு கொண்ட போது அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து குழந்தை விற்பனை செய்ததாகச் சொன்னால் போலீசார் தன்னை கைது செய்வார்களோ என பயந்த தனலட்சுமி குழந்தை காணாமல் போனதாக புகார் அளித்தது தெரிய வந்தது .இதை எடுத்து குழந்தை விற்ற தனலட்சுமி வாங்கிய சுமதி, உதயா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.