தேதி குறிச்சாச்சி.. பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்? குறுக்கே வரும் போரிஸ் ஜான்சன்.. விறுவிறுப்பு
லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்த நிலையில் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ரிஷி சுனக்கிற்கு செக் வைக்கும் வகையில் மீண்டும் போரிஸ் ஜான்சன் களமிறங்கலாம் என கூறப்படுகிறது
பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் மீது ஊழல், முறைகேடு புகார் எழுந்ததால் சமீபத்தில் அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் ஏராளமானவர்கள் களமிறங்கினர்.
ஒவ்வொரு கட்டங்களாக நடந்த தேர்தலில் இறுதி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், லிஸ் ட்ரஸ் இருந்தனர். இதில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று பிரதமரானார்.

லிஸ் ட்ரஸ் ராஜினாமா
பிரிட்டன் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மினி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் பெரும் நிறுவனங்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டன. இது நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான பிரிட்டன் கரன்சியான பவுண்ட்டின் மதிப்பு வீழ்ந்தது. பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி சென்றதால் வேறு வழியின்றி லிஸ் ட்ரஸ் நேற்று ராஜினாமா செய்தார். வெறும் 45 நாட்கள் மட்டுமே அவர் பிரதமராக இருந்தார். இதன்மூலம் பிரிட்டனில் குறுகிய காலம் பிரதமராக இருந்த நபர் என்ற பெயரை லிஸ் ட்ரஸ் பெற்றுள்ளார்.

அடுத்த பிரதமர் யார்?
பிரிட்டனை பொறுத்தமட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த காலக்கட்டத்தில் மட்டும் 2 பேர் பிரிட்டன் பிரதமர்களாகவும், 2 பேர் உள்துறை அமைச்சர்களாகவும், 3 பேர் நிதி அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர். இதனால் பிரிட்டனுக்கு நிலையான அதேநேரத்தில் பொருளாதாரத்தை நெருக்கடி நிலையில் இருந்து மீட்கும் திறன் கொண்ட நபரை பிரதமராக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதனை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினரும் உணர்ந்துள்ளனர்.

போட்டி விதிமுறை என்ன?
இந்நிலையில் தான் இன்னும் ஒரு வாரத்துக்குள் பிரிட்டனுக்கு புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என ராஜினாமா செய்த லிஸ் ட்ரஸ் அறிவித்தார். அதன்படி தற்போது தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் துவங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 100 எம்பிக்களின் ஆதரவு தேவை. 100 எம்பிக்களின் ஆதரவு இருப்போர் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மொத்தம் 357 எம்பிக்கள் உள்ளனர். இதனால் அதிகபட்சமாக 3 பேர் போட்டியிட வாய்ப்புள்ளது.

தேதி குறிச்சாச்சி
இந்த வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 24 மதியம் 2 மணிக்கு முடிவடைகிறது. அதன்பிறகு எம்பிக்களுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு அக்டோபர் 24ம் தேதி மதியம் 3.30 மணி முதல் 5.30 மணி வரை நடத்தப்பட்டு மாலை 6 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதன்பிறகு கட்சி உறுப்பினர்கள் ஓட்டளிக்கும் வகையிலான 2ம் கட்ட தேர்தல் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடத்தப்படும். இதில் கட்சியின் 172,000 உறுப்பினர்களை ஆன்லைன் முறையில் ஓட்டளிப்பார்கள். இதில் இறுதிக்கட்ட போட்டிக்கான 2 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும். பிரிட்டன் பிரதமராகும் இவர்கள் 2 பேருக்கும் இடையேயான போட்டியில் உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் ரகசியமாக ஓட்டளிப்பார்கள். அக்டோபர் 28ம் தேதி வரை இந்த ஓட்டுப்பதிவு நடக்கும். அதன்பிறகு ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதாவது பிரிட்டனின் புதிய பிரதமர் யார்? என்பது அக்டோபர் 28 ம் தேி தெரியவரும்.

ரிஷி சுனக் முன்னிலை
பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் தற்போதைய சூழலில் 3 பேர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதில் முதல் இடத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கு உள்ளார். 42 வயது நிரம்பிய இவர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த அனுபவம் கொண்டவர். மேலும் ராஜினாமா செய்த லிஸ் ட்ரஸின் பொருளாதார கொள்கை என்பது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என முன்கூட்டியே தெரிவித்தார். பொருளாதார அறிவு, முன்அனுபவம் கொண்டதால் ரிஷி சுனக்கின் பெயர் முன்னிலையில் உள்ளது.

போரிஸ் ஜான்சன்
இதேபோல் போரிஸ் ஜான்சனும் முன்னிலையில் உள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் இவர் பதவி விலகினாலும் கூட தொடர்ந்து அவருக்கு அதிகமானவர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர். இதேபோல் மூன்றாவது இடத்தில் பென்னி மோர்டன்ட் உள்ளார். இவர் லிஸ் ட்ரஸை எதிர்த்து பிரதமராக போட்டியிட்டபோது 3வது இடம் பெற்றார். இவர்கள் 3 பேரில் ஒருவர் தான் பிரிட்டன் பிரதமராக மாறலாம் என கூறப்படுகிறது. இதனால் தற்போது 3 பேரின் ஆதரவாளர்களும் இணையதளங்களில் பிரசாரத்தை துவங்கி உள்ளனர்.

போரிஸ் VS ரிஷி சுனக்
தற்போதைய சூழலில் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக்கிற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இருப்பினும் போரிஸ் ஜான்சன் களமிறங்கினால் அது ரிஷி சுனக்கிற்கு பின்னடைவாக மாறலாம் என கருதப்படுகிறது. ஏனென்றால் போரிஸ் ஜான்சன் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும் கூட அவர் மீது இன்னும் கூட ஏராளமானவர்கள் அவர் சிறப்பாக செயல்பட்டு நாட்டில் பொருளாதாரத்தை முன்னேற்றுவார் என கருதுகின்றனர். இதனால் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? என்பதில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications