பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் போட்டி! குடும்ப பாரம்பரியத்தை கூறி பிரசாரம் துவக்கம்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டியிடும் நிலையில் அவர் தனது பிரசாரத்தை துவங்கினார். தனது குடும்பத்தின் பாரம்பரியம், பிரிட்டன் வழங்கிய வாய்ப்பு பற்றி அவர் பெருமையாக பேசி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Recommended Video
பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்தார். இவர் சமீபத்தில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பார்ட்டி நடத்தியது உள்ளிட்ட வெவ்வேறு சம்பவங்கள் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தின.
இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் போரிஸ் ஜான்சனின் பிரதமர் பதவிக்கு ஆபத்து நேரிடலாம் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் திடீரென அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

போரிஸ் ஜான்சன் ராஜினாமா
இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தேர்வாகும் வரை அவர் இடைக்கால பிரதமராக நீடிக்க உள்ளார். இந்நிலையில் தான் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டியில் ஏராளமானவர்கள் உள்ளனர்.

ரிஷி சுனக் பிரசாரம்
இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்களும் போட்டியிடுகின்றனர். கோவாவை பூர்விகமாக கொண்டு அட்டர்னி ஜெனரலாக பணியாற்றிய சூவெல்லா பிரவேர்மன், நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக் ஆகியோர் அடங்குவர். இவர்கள் தவிர பிரிட்டனை சேர்ந்தவர்களும் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில் ரிஷி சுனக் டுவிட்டரில் பிரசாரத்தை துவக்கினார்.

நம்பிக்கையை மீட்டெடுப்போம்
இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரிஷி சுனக், ‛‛நான் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்காக போட்டியிடுகிறேன். நாம் அனைவரும் இணைந்து நம்பிக்கையை மீட்டெடுப்போம். பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைப்போம். நாட்டை ஒற்றுமைப்படுத்துவோம். இந்த தருணத்தில் சரியான முடிவுகள் எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

குடும்ப பாரம்பரியம்
இந்த வீடியோவானது 3 நிமிடங்கள் வரை ஓடுகிறது. அதில் ரிஷி சுனக் தனது பெற்றோர், குடும்ப பாரம்பரியம் பற்றி கூறியுள்ளார். அதோடு தனது பெற்றோர் எப்படி போராடினார்கள்? அவர்களுக்கு பிரிட்டன் எப்படி சிறந்த எதிர்காலத்தை அளித்தது என்பது பற்றியும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா காலத்தில் தான் மேற்கொண்ட பணிகள் பற்றியும் ரிஷி சுனக் பேசியுள்ளார்.

இந்தியாவுடன் தொடர்பு எப்படி?
ரிஷி சுனக்கின் தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். ரிஷி சுனக்கின் தந்தை பெயர் யாஷ்வீர். தாய் உஷா. ரிஷி சுனக்கின் மனைவி பெயர் அக்சதா மூர்த்தி. இவர் கர்நாடகத்தை சேர்ந்த இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள். ரிஷி சுனக், அக்சதா மூர்த்தி ஆகியோர் அமெரிக்காவில் படித்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications