120 ஆண்டு பாரம்பரியம்.. கன்கேரஜ் வண்டி.. பிரிட்டன் மகாராணியின் உடலை இழுத்து சென்ற 98 மாலுமிகள்..ஏன்?
லண்டன்: பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத்தின் உடல் இறுதி சடங்குக்கு பிறகு அவரது சவப்பெட்டி கன்கேரஜ் வண்டி மூலம் 98 மாலுமிகளால் இழுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. உடலை சாரட் வண்டியில் இழுத்து செல்லும் 120 ஆண்டு பாரம்பரியத்தின் பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் செயல்பட்ட 2ம் எலிசபெத் 1952ம் ஆண்டில் அரியனை ஏறி மகாராணியாக முடிசூடினார்.
வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தார். இருப்பினும் கடந்த 8ம் தேதி இரவில் மகாராணி 2ம் எலிசபெத் காலமானார்.
எடுத்துச் செல்லப்பட்ட ராணி எலிசபெத் உடல்! கண் கலங்கிய மன்னர் சார்லஸ்.. பிரிட்டன் மக்கள் மவுன அஞ்சலி
2ம் எலிசபெத் ராணிக்கு அஞ்சலி
மகாராணி 2ம் எலிசபெத் மறைவயொட்டி இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மகாராணி 2ம் எலிசபெத்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், உலக தலைவர்கள் லண்டன் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து இன்று மாலை 3.30 மணிக்கு பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத்தின் இறுதிசடங்கு துவங்கியது. வெஸ்ட்மின்ஸ்ட்ர் அரங்கில் இருந்து சாரட் வண்டியில் மகாராணியின் சவப்பெட்டி வைக்கப்பட்டு ஊர்வலம் புறப்பட்டடு வெஸ்ட் மின்ஸ்டரர் மடாலய பகுதியில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
உடலை இழுத்து சென்ற 98 மாலுமிகள்
இதற்காக அவரது சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ராணியின் சவப்பெட்டி கன்கேரஜ் வண்டியை 98 ராயல் கடற்படை வீரர்கள் கயிறு கட்டி இழுத்து சென்றனர். இந்த முறை என்பது பிரிட்டன் அரச குடும்பத்தின் வழக்கமாகும். 1901 முதல் குயின் விக்டோரியா காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. குயின் விக்டோரியா என்பவர் மகாராணி 2ம் எலிசபெத்தின் கொள்ளு பாட்டியாவார்.
120 ஆண்டு பழமையான நடைமுறை
அதாவது குயின் விக்டோரியா என்பவர் 1901ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி மரணமடைந்தார். அவரது உடலை கன்கேரஜ் வண்டியில் ஊர்வலமாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த காலத்தில் குதிரைகள் தான் கன்கேரஜ் வண்டியை இழுத்து செல்லும். ஆனால் குயின் விக்டோரியா ஜனவரி மாதம் இறந்ததால் அதிக குளிர் நிலவியது. இதனால் குதிரைகள் பயன்படுத்துவதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து மாலுமிகள் மூலம் குயின் விக்டோரியாவின் உடல் கன்கேரஜ் வண்டியில் இழுத்து செல்லப்பட்டது. அதைதொடர்ந்து தற்போது வரை அந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டது.
மாலுமிகள் ஏன்?
இங்கிலாந்தின் படைப்பிரிவில் பல பிரிவுகள் இருந்தாலும் கூட கடற்படையை சேர்ந்தவர்கள் தான் மகாராணி, மன்னர்களின் உடல்கள் இருக்கும் சவப்பெட்டி அடங்கிய கன்கேரஜ் வண்டியை இழுத்து செல்வார்கள். இதன் பின்னணியிலும் ஒரு முக்கிய விஷயம் உள்ளது. அதாவது பிரிட்டன் தனது சாம்ராஜ்ஜியத்தை கடல்வழி பயணத்தால் தான் பல நாடுகளுக்கும் விரிவு செய்தது. இதை நினைவுப்படுத்தி கடல்படை வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தான் இந்த கடற்படையின் மாலுமிகள் பிரிட்டன் மகாராணி-மன்னர்களின் உடல்கள் அடங்கிய கன்கேரஜ் வண்டியை இழுத்து செல்வார்கள். அதனை தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் அணிவகுத்து சென்றனர். இந்த நடைமுறை தான் இன்றும் பின்பற்றப்பட்டது.
ஒரே வண்டி தான்
மேலும் இன்று பயன்படுத்தப்பட்ட இந்த கன்கேரஜ் வண்டி தான்1901ல் மரணமடைந்த விக்டோரியா மகாராணியின் சவப்பெட்டியை சுமந்து சென்றது. அதன்பிறகு மன்னர் 6ம் எட்வர்ட், மன்னர் 5ம் ஜார்ஜ், மன்னர் 6ம் ஜார்ஜ் (மகாராணி 2ம் எலிசபெத்தின் தந்தை), உறவினரான மவுண்ட் பேட்டன் ஆகியோரின் உடல்களையும் சுமந்து சென்றது. அதன்பிறகு தற்போது மகாராணி 2ம் எலிசபெத்தின் உடலை அந்த கன்கேரஜ் வண்டி சுமந்து சென்றுள்ளது.
96 முறை ஒலித்த பெல்
இன்று மகாராணி 2ம் எலிசபெத்தின் வாழ்க்கை மற்றும் பிரிட்டனுக்கான சேவைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒருமுறை என மொத்தம் 96 முறை சர்ச் பெல் ஒலிக்கப்பட்டது. பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் 96 ஆண்டுகள் வாழ்ந்ததை குறிக்கும் வகையில் இந்த பெல் இசைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.