தீவிர பாதிப்பை இரட்டிப்பாக்கும்.. இந்தியாவில் வேகமாக பரவிய டெல்டா வகை கொரோனா.. ஆய்வாளர்கள் தகவல்
லண்டன்: இந்தியாவில் வேகமாகப் பரவிய டெல்டா வகை கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை இரட்டிப்பாக்குவதாக ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டிருந்தது. இந்தியாவில் 2ஆம் அலை ஏற்பட பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், உருமாறிய கொரோனா முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது.
8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு
குறிப்பாக, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் வேகமாகப் பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பிரிட்டன் கொரோனா
இந்தியாவில் இந்த டெல்டா வகை கொரோனா பரவல் சற்றே குறைந்துள்ளது. ஆனால், பிரிட்டன் நாட்டில் டெல்டா வகை கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது. இது குறித்து ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில் கொரோனா தடுப்பூசிகள் டெல்கா வகை கொரோனாவுக்கு எதிராகக் குறைவான தடுப்பாற்றலையே அளிப்பதை கண்டறிந்தனர். குறிப்பாக, பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனாவை காட்டிலும் டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகளின் தடுப்பாற்றல் குறைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தடுப்பாற்றல் குறைகிறது
பைசர் தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக 79% தடுப்பாற்றல் தருகிறது. இது ஆல்பா வகை கொரோனாவுக்கு எதிராக 92% தடுப்பாற்றலை அளித்திருந்தது. அதேபோல ஆல்பா வகை கொரோனாவுக்கு எதிராக 73% தடுப்பாற்றலை அளித்த ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி, டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக 60% மட்டுமே தடுப்பாற்றலை தருகிறது. இருப்பினும், செயல்திறன் குறைந்தாலும், தடுப்பூசிகள் தீவிர கொரோனா பாதிப்பையும், உயிரிழப்புகளையும் நன்கு கட்டுப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தடுப்பூசிகள்
இது குறித்து ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார தொற்றுநோயியல் பேராசிரியர் கிறிஸ் ராபர்ட்சன் கூறுகையில், டெல்டா வகை கொரோனா மருத்துவமனையில் சேர்க்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கியது. ஆனால் தடுப்பூசிகள் அந்த ஆபத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. அதாவது தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டவருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அவர் மருத்துவமனையில் அனுமதியாக வேண்டிய அபாயத்தைத் தடுப்பூசிகள் 70% குறைக்கிறது" என்றார்.
இரண்டு டோஸ்கள்
அதாவது ஒருவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை எடுத்துக் கொண்டால், அவரது உடலில் தடுப்பாற்றல் தேவையான அளவு ஆன்டிபாடிகள் உருவாகிறது. எனவே, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாகத் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் மக்களுக்குச் செலுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, டெல்டா வகை கொரோனா வேகமாகப் பரவுவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பதைத் தாமதமாக்குவதாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.