நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி... லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்ததும் அவர் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றார்.
நீரவ் மோடி செய்துள்ள மோசடி புகாரை சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். நீரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அவரை நாடு கடத்தும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டிருந்தது.
லண்டனில் கைது
இந்தியா அளித்திருந்த நாடு கடத்தும் கோரிக்கை அடிப்படையில் நீரவ் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான இந்தியாவின் வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீரவ் மோடி பலமுறை மனுத் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், அந்த மனுக்களை லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
நாடு கடத்த அனுமதி
இந்நிலையில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கி தற்போது தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், "நீரவ் மோடி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டே இருக்கும். இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் நீரவ் மோடிக்கு நீதி கிடைக்காது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை" என்று கூறினார்.
மேல் முறையீடு உரிமை உண்டு
ரூ.14 ஆயிரம் கோடி வங்கி மோசடியில் நீரவ் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நீரவ் மோடி முறையான வியாபாரத்தில் ஈடுபட்டார் என்பதை ஏற்க முடியவில்லை என்று தெரிவித்த நீதிபதி, அவரது பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் இருப்பதாகவும் இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக நீரவ் மோடி மீது இந்தியா விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீரவ் மோடிக்கு உரிமை உண்டு என்றும் நீதிபதி தெரிவித்தார். இதனால் நீரவ் மோடி தரப்பு லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது.
நீரவ் மோடி vs இந்தியா வாதம்
நீரவ் மோடி மன ரீதியாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களும் வருவதாகவும் அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இந்தியச் சிறைச்சாலைகள் நீரவ் மோடிக்கு பாதுகாப்பானதாக இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மும்பையில் நீரவ் மோடி சிறை வைக்கப்படும் அறையை அமலாக்க துறை வீடியோவாக எடுத்து சமர்ப்பித்தது. இதன் பின்னரே நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனால் விரைவில் நீரவ் மோடி நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.