அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய்க்கு பிரிட்டனில் திருமணம்.. புகைப்படங்கள் வைரல்
லண்டன்: பெண் கல்விக்காக போராடி நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், பிரிட்டனில் அவரது வீட்டில் திடீர் திருமணம் செய்து கொண்டார். அதற்கான புகைப்படங்களை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த மலாலா (24), பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். 15 வயதாக இருந்த போதே அவரை 2012 ஆம் ஆண்டு தலிபான்கள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் மலாலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு பிரிட்டனில் வசித்து வருகிறார்.
ஓவர்நைட்டில் ஆச்சரியம்.. 7.4 கோடி ரூபாய் பரிசு பெற்ற இளம்பெண்.. அடித்தது அதிர்ஷ்டம்.. என்ன நடந்தது?
உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களது முன்னேற்றத்திற்காகவும் குரல் கொடுத்து வருகிறார். இதையடுத்து அவருக்கு 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
நோபல் பரிசு
உலகத்திலேயே சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் மலாலா என்ற பெருமையும் கிடைத்தது. தற்போது 24 வயதாகும் மலாலா பிரிட்டனில் உள்ளார். அவர் பிர்மின்காம் நகரில் அசார் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அசார் என்ற பெயரை தவிர்த்து கணவர் குறித்து வேறு எந்த விஷயத்தையும் அவர் சொல்லவில்லை.
மகிழ்ச்சி
இதுகுறித்து மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இன்று எனது வாழ்வின் பொன்னான நாள். அசாரும் நானும் வாழ்க்கைத் துணையாக இணையும் வகையில் இன்று திருமணம் செய்து கொண்டோம். பிர்மின்காமில் எங்கள் குடும்பத்தினர் புடைச்சூழ எங்கள் திருமணம் எளிய முறையில் நடந்தது. உங்களது ஆசியும் வாழ்த்துகளும் தேவை. வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றாக இணைந்து பயணிக்க போவதில் எங்களுக்கு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
அசார் மாலிக் யார்
எனினும் அசார் மாலிக் யார் என்பதை நமது நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி அசார் மாலிக், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உயர் செயல்பாட்டு மையத்தின் பொது மேலாளர் என்கிறார்கள். கடந்த ஜூலை மாதம் பிரிட்டன் வார நாளிதழான வோக்கிற்கு மலாலா பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் நான் திருமணம் செய்து கொள்வேனா என்பது எனக்கே தெரியவில்லை.
வாழ்க்கை
மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என எனக்கு இன்னமும் புரியவில்லை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் நபருடன் வாழ விரும்புகிறீர்கள் என்றால் ஏன்ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டு திருமணம் செய்து கொள்கிறீர்கள். அப்படியில்லாமல் நீங்கள் ஏன் பார்ட்னர்களாக வாழ்க்கையைத் தொடரக் கூடாது என மிக நீளமான ஒரு பேட்டியை அளித்திருந்தார்.
பிரிட்டனில் திருமணம்
இதையடுத்து மலாலா திருமணத்திற்கு எதிராக தனது கருத்துகளை தெரிவித்துவிட்டார் என பாகிஸ்தான் ஊடகங்கள் விமர்சிக்கத் தொடங்கின. இந்த நிலையில் அவர் எளிமையான முறையில் இஸ்லாமிய வழக்கப்படி பிரிட்டனில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இஸ்லாமிய மதகுரு முன்னிலையில் அசார் ஒரு ஆவணத்தில் கையெழுத்திடும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.