பிரதமராக இல்லை! இந்துவாக வந்துள்ளேன்! ரிஷி சுனக் சொன்னவுடன் அதிர்ந்த கூட்டம்! கொண்டாடும் நெட்டிசன்கள்
லண்டன்: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இந்து மதம் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருந்து வருகிறார். பிரிட்டன் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் வருவது இதுவே முதல்முறை. மேலும், இளம்வயது பிரதமர், முதல் இந்து எனப் பல சிறப்புகளையும் அவர் பெற்றுள்ளார்.

இந்து மதத்தின் மீது தீவிர பற்று கொண்டவராகவே ரிஷி சுனக் அறியப்படுகிறார். அடிக்கடி கோயிலுக்குச் செல்வது.. கோமாதா வழிபாடு செய்வது என இந்து மதத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் அவர் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் தயங்கியதே இல்லை.
ரிஷி சுனக்: இதற்கிடையே அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ரிஷி சுனக் இந்து மதம் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இது குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், "கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் இந்த மொராரி பாபுவின் விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.. நான் இன்று ஒரு பிரதமராக இங்கு வரவில்லை.. ஒரு இந்துவாகவே இங்கு வந்துள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.
மொராரி பாபு என்பவர் பஞ்சாபைச் சேர்ந்த மத போதகர் ஆவார். சுனக்கும் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுனக் சவுத்தாம்ப்டனில் பிறந்து வளர்ந்தார். இருப்பினும், அவரது பெற்றோர் இந்தியாவில் பிறந்தவர்கள். இதனால் இந்தியாவில் கொண்டாடப்படும் தலைவர்களில் ஒருவராகவே ரிஷி சுனக் இருந்து வருகிறார்.
கவுரவம்: ரிஷி சுனக் இந்த நிகழ்ச்சியில் மேலும் பேசுகையில், "எனது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் இந்து மதம் தான் வழிநடத்துகிறது.. பிரிட்டனின் பிரதமராக எது சிறந்ததோ அதைச் செய்ய இந்து மதமே எனக்குத் தைரியத்தை அளிக்கிறது.. என்னைப் பொறுத்தவரை, மத நம்பிக்கை என்பது மிகவும் தனிப்பட்டது. பிரதமராக இருப்பது ஒரு பெரிய கவுரவம் தான்.
ஆனால் அது எளிதான வேலை அல்ல. பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது. நாட்டிற்கு நல்லதைச் செய்யும் தைரியத்தை இந்து மதம் தான் என்னை வழிநடத்துகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இந்து மதம்: எனது அலுவலகத்தின் மேடையில் எப்போதுமே தங்க விநாயகர் சிலை இருக்கும். அதேபோல இங்கு மொராரி பாபுவின் ராம் கதாவின் பின்னால் ஹனுமானின் உருவம் இருக்கிறது. இது பெரு மகிழ்ச்சிதான்.. எந்தவொரு விஷயத்திலும் முக்கிய முடிவை எடுக்கும் முன்பு பலரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதை விநாயகர் சிலைதான் நினைவூட்டுகிறது.
நான் குழந்தையாக இருந்த போது சவுத்தாம்ப்டனில் தான் வளர்ந்தேன்.. அப்போது அடிக்கடி நான் கோயிலுக்கு செல்வேன்.. கோயில்களில் பூஜைகளைச் செய்வோம்.. அப்போது நான் குடும்பத்துடன் இந்த பூஜைகளில் கலந்து கொள்வேன்.. எனது முன்னோர்கள் இந்தியா மற்றும் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து, இங்கு வாய்ப்புக்காகப் பல ஆண்டுகள் உழைத்தவர்கள்.
வாழ்க்கையில் சவால்களைத் தைரியமாக எதிர்கொள்வதற்கும், ஆட்சி செய்வதற்கும் ராமர் தான் நமக்குச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார்.. பணிவுடன் மற்றும் தன்னலமின்றி பணியாற்றினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார். மேலும், அவர் தனது உரையை 'ஜெய் சியா ராம்' என்று முழக்கமிட்டு முடித்தார்.












Click it and Unblock the Notifications