நஷ்டஈடு கேட்ட நபர்.. ரூ.234 லட்சம் கோடிக்கு செக் அனுப்பி.. ‘ஷாக்’ தந்த மின்சார வாரியம்
தவறுதலாக ரூ. 234 லட்சம் கோடி நஷ்ட ஈடு தருவதாக இங்கிலாந்து மின்சார வாரியம் அனுப்பிய காசோலையின் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
லண்டன்: இங்கிலாந்தில் புயலால் மின்சாரம் இன்றி கஷ்டப்பட்டதாக இழப்பீடு கேட்ட நபருக்கு, இந்திய மதிப்பில் ரூ. 234 லட்சம் கோடி மதிப்பிலான காசோலையை மின்சார வாரியம் அளித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் அர்வென் புயலால் ஐரோப்பா கடும் சேதத்தினை சந்தித்தது. நவம்பர் 26 மற்றும் 27ம் தேதி இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளில் இந்தப் புயல் வீசியது. மணிக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று காரணமாக 3 பேர் உயிரிழந்ததாக இங்கிலாந்து அரசு தெரிவித்திருந்தது.
இந்தப் புயலால் இங்கிலாந்தில் மின்சார பகிர்மான கட்டுமானங்கள் பலத்த சேதமடைந்தன. நாடே இருளில் மூழ்கியது. இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்காக பொதுமக்கள் இழப்பீடு கோரலாம் என்ற வழக்கம் உள்ளது. அதற்கு அந்நாட்டு மின்சார வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்கும்.
இந்த உரிமையின் அடிப்படையில் அர்வென் புயலால் வீட்டில் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டதாக கெரேத் ஹ்யூஸ் என்பவர் இழப்பீடு கேட்டு அந்நாட்டு மின்சார வாரியத்திற்கு கடிதம் அனுப்பினார். கெரேத்தின் கோரிக்கையை ஏற்ற மின்சார வாரியம், அவருக்கான இழப்பீட்டுத் தொகை என ஒரு காசோலையை அனுப்பியது.

அதிர்ச்சியான கெரேத்
அதில், 2.3 ட்ரில்லியன் பவுண்ட் என குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்து கெரேத் அதிர்ச்சியாகி விட்டது. இந்திய மதிப்பில் இது சுமார் 234 லட்சம் கோடி ஆகும். கவனக்குறைவால் இப்படி மின்சார வாரியத்தில் அனுப்பி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட அவர், வேடிக்கையாக அந்த காசோலையின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

சந்தேகம்
கூடவே, "அர்வென் புயலால் மின்வெட்டு ஏற்பட்டதற்காக எனக்கு இழப்பீடு அளித்ததற்கு நன்றி, இதை நான் பேங்கில் கொடுப்பதற்கு முன், இவ்வளவு பெரிய தொகையை எனக்கு உங்களால் உண்மையிலேயே தரமுடியுமா?" என நகைச்சுவையாகக் கேட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலாதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நார்த் பவர் க்ரிட்டின் கவனத்திற்கும் இது சென்றது.

மின்சார வாரியம் பதில்
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மின்சார வாரிய அதிகாரிகள், "வணக்கம் கெரேத், இதனை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. உங்களது முகவரி, பெயர், கணக்கு விவரங்களை எங்களுக்கு அனுப்பவும், கூடிய விரைவில் அதனை சரி செய்கிறோம்" கெரேத்தின் பதிவுக்கு பதிலளித்துள்ளனர்.

குளறுபடி
இதற்கிடையே, டிவிட்டரில் கெரேத்தின் காசோலைப் புகைப்படத்தைப் பார்த்து, மேலும் சிலரும் இதுபோல் தங்களுக்கும் குளறுபடி நடந்திருப்பதாக கமெண்ட்டில் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் வேடிக்கையாக, "உடனே இந்த செக்கை பேங்கில் போட்டு காசைப் பெறுங்கள்" என கெரேத்திற்கு அறிவுரைக் கூறி வருகின்றனர்.

கண்டுபிடிப்பு
தனக்கு மட்டுமின்றி தனது அக்கம்பக்கத்தார் சிலருக்கும் இது போல் காசோலை வந்திருப்பதாக கெரேத் , நார்த் பவர் க்ரிட்டிற்கு மேலும் ஒரு டிவீட் செய்தார். அதனைத் தொடர்ந்து தங்கள் பக்கத் தவறை மின்சார வாரிய அதிகாரிகள் ஆராய்ந்தபோது, கெரேத் மாதிரியே சுமார் 74 பேருக்கு அதிகத் தொகைக்கு காசோலை அனுப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நேர்மைக்கு பாராட்டு
அதனைத் தொடர்ந்து உடனடியாக தங்கள் அனுப்பிய தவறான காசோலைகளை, சம்பந்தப்பட்டவர்கள் வங்கியில் போடும் முன் தடுத்து நிறுத்தியது. மேலும், சம்பந்தப்பட்ட செக்கை வங்கியில் போட்டு குழப்பத்தை ஏற்படுத்தாமல், நேர்மையாக அதனை தங்களது கவனத்திற்கு கொண்டு வந்ததிற்காக கெரேத்தையும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications