கடல் கடந்த காதல்.. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்-அக்சதாவின் முதல் சந்திப்பு எங்கு தெரியுமா? பிளாஷ்பேக்
லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகி உள்ளார். இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்சதாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தான் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்- அக்சதா இடையேயான முதல் சந்திப்பு எங்கே எப்போது நடந்தது? இருவருக்கும் இடையேயான காதல் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் வெறும் 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டது.
இதில் லிஸ் ட்ரஸிடம் தோல்வியடைந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வெற்றி பெறலாம் என்ற தகவல்கள் வெளியாகின. அதன்படி ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகி உள்ளார்.

பிரதமரான ரிஷி சுனக்
அதாவது பிரிட்டனை பொறுத்தமட்டில் பல கட்டங்களாக பிரதமர் தேர்தல் நடக்கும். முதல் கட்ட தேர்தலில் 100 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். இதனை ரிஷி சுனக் பெற்றார். இவருக்கு 148 எம்பிக்கள் வரை ஆதரவு இருந்தது. போரிஸ் ஜான்சனுக்கு 100 எம்பிக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. பென்னி மோர்டான்ட் இறுதி நேரத்தில் விலகினார். இதையடுத்து போட்டியின்றி ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகி உள்ளார்.

பெற்றோர் யார்?
பிரதமராகி உள்ள ரிஷி சுனக் இந்து மதத்தை பின்பற்றி வருகிறார். இதன்மூலம் பிரிட்டனின் முதல் இந்து பிரதமர் என்ற பெருமையை ரிஷி சுனக் பெற்றுள்ளார். இவரது தந்தை பெயர் யாஷ்வீர். தாய் பெயர் உஷா. ரிஷி சுனக்கின் தந்தை வழி தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் கென்யாவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கிருந்த அவரது தந்தை-தாய் ஆகியோர் பிரிட்டனுக்கு சென்றனர்.

கர்நாடகாவின் மருமகன்
மேலும் ரிஷி சுனக் கர்நாடகாவை சேர்ந்த இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியின் மகள் அக்சதா மூர்த்தியை தான் திருமணம் செய்துள்ளார். இவர்கள் 2 பேருக்கும் 2009ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் திருமணம் பற்றிய சுவாரசிய விஷயம் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

ஸ்ட்ரிக்ட்டான சுதா மூர்த்தியின் மகள்
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியின் மகள் அக்சதா. இவருக்கு 2 வயது இருந்தபோது இந்த தம்பதி கர்நாடகா மாநிலம் உப்பள்ளியில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தனர். பெண்ணியவாதி, எழுத்தாளராக அறியப்படும் சுதா மூர்த்தி தனது மகள் அக்சதாவை ஒருபோதும் ஆடம்பரமாக வளர்க்கவில்லை. இதில் சுதா மூர்த்தி மிகவும் உறுதியாக இருந்தார். செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கூட பள்ளிக்கு சொகுசு காரில் போகாமல் ஆட்டோக்களில் தான் சென்று வந்தார் அக்சதா.

வெளிநாட்டில் மேல்படிப்பு
பெங்களூரில் பள்ளி படிப்பை முடித்த அக்சதா, உயர் கல்விக்காக வெளிநாடு சென்றார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கிளேர்மாண்ட் மெக்கென்னா கல்லூரியில் பிரெஞ்சு மற்றும் பொருளாதார படிப்பை அக்சதா படித்தார். அதன்பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள புகழ்பெற்ற பேஷன் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் & மெர்ச்சண்டைசிங் நிறுவனத்தில் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். இதையடுத்து எம்பிஏ படிப்புக்காக அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

முதல் சந்திப்பு
இந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தான் அக்சதா மூர்த்தி, ரிஷி சுனக் இடையேயான சந்திப்பு நடந்தது. அக்சதா எம்பிஏ படித்தபோது ரிஷி சுனக் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து புல்பிரைட் அறிஞராக இருந்த நிலையில் எம்பிஏ படிப்பை தொடர்ந்தார். இங்கு தான் இருவரும் சந்தித்து கொண்டனர்.

திருமணம்
இதுதான் இருவருக்கும் இனிமையான அதேநேரத்தில் இதயங்கள் இடமாறி கொண்ட சந்திப்பாக அமைந்தது. அதோடு இருவரும் ஒருவரையொருவர் விரும்பி காதல் செய்ய துவங்கினர். இருப்பினும் குடும்பத்தினர் சூழ தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர். அதன்பிறகு ரிஷி சுனக்-அக்சதா ஆகியோர் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் 2009ல் திருமணம் செய்து கொண்டனர். பெங்களூரில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இருப்பினும் இந்த திருமணத்தில் இந்தியாவின் பல துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

மனைவி மீது அதிக பாசம்
மேலும் ரிஷி சுனக் அரசியலில் இருந்தாலும் கூட தனது மனைவி, மகள்கள் குடும்பத்துக்காக நேரம் செலவிடுவதை தவிர்ப்பது இல்லை. மேலும் பொது இடங்களில் கூட தனது மனைவி அக்சதா தனக்கு பக்கபலமாக இருக்கிறார். அவர் மிகச்சிறந்த பெண்மணி என பலமுறை கூறியுள்ளார். எங்கும் எப்போதும் ரிஷி சுனக் மனைவி மற்றும் அவரது குடும்பத்தை விட்டு கொடுத்தது இல்லை.

பேஷன் டிசைனிங்
அக்சதா மூர்த்தி தற்போதும் பேஷன் டிசைனிங்கில் ஆர்வமாக உள்ளார். இவர் புதிய டிசைனிங்கை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதாவது இந்திய பாரம்பரிய ஆடைகளை மேற்கத்திய கலாச்சார பேஷன்களுடன் கலந்து புதிய உடையை உருவாக்குவதில் கைதேர்ந்தவராக அக்சதா உள்ளார். அக்சதா டிசைன்ஸ் நிறுவனம் தவிர அவர் டெண்ட்ரிஸ், டச்சு கிளீன்டெக் இன்குபேட்டர் பண்ட் இயக்குனராகவும் உள்ளார்.

பிரிட்டன் ராணியை விட சொத்து அதிகம்
மேலும் தந்தை நாராயண மூர்த்தியின் நிறுவனமான இன்போசிஸில் 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை கொண்டுள்ளார். மேலும் லண்டனில் உள்ள கென்சிங்டனில் 7 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான வீடு உள்பட 4 வீடுகளை வைத்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா மோனிகாவில் சொகுசு பிளாட் உள்ளது. தற்போதைய சூழலில் அக்சதா மூர்த்தியின் சொத்து மதிப்பு என்பது பிரிட்டன் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத்தை விட அதிகம் என கூறப்படுகிறது.

மனைவியால் வெடித்த சர்ச்சை
முன்னதாக ரிஷி சுனக் மனைவி அக்சதா மூர்த்தி மூலம் சர்ச்சையில் சிக்கினார். அக்சதா மூர்த்தி இந்திய குடியுரிமையுடன் உள்ளார். பிரிட்டனில் வசித்தாலும் கூட பிரிட்டனுக்கு வெளியே ஈட்டும் வருமானத்துக்கு அவர் அங்கு வருமான வரி செலுத்த தேவையில்லை. சமீபத்தில் இது தொடர்பாக அக்சதா மூர்த்தி மற்றும் ரிஷி சுனக் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் இந்த விஷயத்தில் விதிமீறல் இல்லை. நான் எனது மனைவியின் பக்கம் தான் இருப்பேன் என உறுதியாக ரிஷி சுனக் கூறினார். லிஸ் ட்ரஸை எதிர்த்து போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ரிஷி சுனக் சமீபத்தில் தோற்றதற்கு இந்த சர்ச்சையும் ஒரு காரணம் என அப்போது கூறப்பட்டது. இந்நிலையில் தான் ரிஷி சுனக் லிஸ் ட்ரஸ் ராஜினாமாவால் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications