ஒரு மணி நேரத்தில் 31 பேர் பலி.. உ.பியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்துகள்.. பெரும் சோகம்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு மணி நேரத்தில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
விபத்து நடந்த பகுதிகளில் உத்தரப் பிரதேசத்தின் அமைச்சர்கள் மீட்பு பணியை நேரில் இருந்து துரிதப்படுத்தியுள்ளனர்.

உயிரிழப்பு
இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுவாக சாலை விபத்துக்களில் காயமடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் உயிரிழப்புகள் குறைவாக இருக்கும். ஆனால் உத்தரப் பிரதேச மாநிலம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உயிரிழப்பு எண்ணிக்கைதான் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில் தற்போது உத்தரப் பிரதேசத்தில் மேலும் சில சாலை விபத்துக்கள் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளன.

பக்தர்கள் பலி
நேற்றிரவு நடைபெற்ற இரண்டு வெவ்வேறு விபத்துக்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நேற்றிரவு உன்னாவில் உள்ள சந்திரிகா தேவி கோயிலிலிருந்து 50 பக்தர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று கட்டம்பூர் பகுதியில் வந்துகொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள குளத்தில் அது கவிழ்ந்துள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் என சம்பவ இடத்திலேயே சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்றொரு விபத்து
20 பேர் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து செயல்படாத காரணத்தினால்தான் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து நடந்து ஒரு சில நிமிடங்களில் அஹிர்வான் மேம்பாலம் அருகே மற்றொரு விபத்தும் நடந்துள்ளது.

நிவாரணம்
ஆட்களை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருக்கையில் அதன் மீது வேகமாக வந்த லாரி ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அறிவுறுத்தல்
சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இரண்டு அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினார். டிராக்டர்களில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துக்களில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தின் போக்குவரத்து பாதுகாப்பு வசதி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.












Click it and Unblock the Notifications