"டேய் எப்புட்றா.." எலியை கொன்றவர் மீது எப்ஐஆர்! பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட எலி உடல்!
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் எலி வாலில் கல்லைக் கட்டி வாய்க்காலில் வீசி கொன்றதாக இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எலியை கொல்வதற்கென எலி பேஸ்டு, பவுடர், பொறி என அனைத்தும் சட்டப்பூர்வமாக விற்கப்பட்டு வரும் நிலையில் எலியை கொன்றதற்காக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விலங்கு நல ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மண்ட மேல இருக்குற கொண்டைய மறந்துட்டோமே! நகைக் கடையில் கைவரிசை! கொள்ளையன் சிக்கியது இப்படித் தானாம்!
எலி கொலை
இது குறித்து சதர் கோட்வாலி காவல்துறை வட்டராம் கூறியதாவது, "விலங்குகள் உரிமை ஆர்வலரான விக்கேந்திரன் சம்பவம் நடந்த அன்று மதியம் சதர் கோட்வாலியின் காந்தி மைதானம் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்குள்ள பாறை மீது மனோஜ் குமார் எனும் இளைஞன் ஒருவன் அமர்ந்து எலியின் வாலில் கயிற்றை கட்டிக்கொண்டிருந்தார். இதைக்கண்ட விக்கேந்திரன் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று மனோஜ் குமாரிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனோஜ் குமார் அந்த கயிற்றின் மறு முனையில் கல்லை கட்டி அருகில் இருந்த வாய்க்காலில் வீசியுள்ளார்.
பிரேத பரிசோதனை
இதனைக் கண்டு அதிர்ந்துபோன விக்கேந்திரன் உடனடியாக வாய்க்காலில் குதித்து எலியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் எலி உயிரிழந்துவிட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த எலியுடன் வந்த விக்கேந்திரன் எலியை கொன்றதற்காக விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மனோஜ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்து மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல உயிரிழந்த எலி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
விளக்கம்
இதனையடுத்து பேட்டியளித்த துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அலோக் மிஸ்ரா, "சம்பவம் தொடர்பாக இளைஞரை உடனடியாக அழைத்து விசாரித்துள்ளோம். முதலில் அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு எலியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அங்கு போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் பரேலியில் உள்ள ஐ.வி.ஆர்.ஐ.க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார். அதேபோல இந்த குற்றம் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராது என்றும் கூறியுள்ளனர்.
வாகனம்
வடமாநிலங்களில் மாடுகள் புனிதமாக வழிப்படப்படுகின்றன. எந்த அளவுக்கு புனிதம் எனில், 19 மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல எலிகள் 'பிள்ளையாரின்' வாகனமாக கருதப்படுவதால் எலிகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் சில இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் எலியை கொன்தற்காக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.