பல்லாங்குழி ரோடு..உபியில் வேகமாக வந்த விஐபி கார்.. வழி கொடுத்து அப்படியே கவிழ்ந்த ஆட்டோ.. வீடியோ
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் சீதாபூரில் குண்டும், குழியுமான ரோட்டில் விஐபி ஒருவர் காரில் செல்லும் நிலையில் அவரை தொடர்ந்து பாதுகாவலர்கள், ஆதரவாளர்கள் காரில் செல்கின்றனர். இந்த வேளையில் விஐபி வாகனத்துக்கு வழி விட முயன்றபோது ரோட்டில் உள்ள பள்ளத்தில் பொதுமக்களுடன் ஆட்டோ ஒன்று கவிழ்ந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பொதுமக்களுக்கு தரமான ரோடுகள் அமைத்து கொடுப்பதாகும்.
பல இடங்களில் ரோடுகள் புதிதாக போடப்பட்டாலும் கூட அது தரமற்றதாக அமையும் பட்சத்தில் உடனடியாக சேதமடைந்து வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் ரோடு சேதம் என்பது அதிகரித்து வருகிறது.

உயிரிழப்பு சம்பவம்
இதன்மூலம் அரசின் நிதிகள் வீணடிக்கப்படுவதுடன், பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் அதிகளவில் சிரமத்தை சந்திக்கின்றனர். அதோடு டூவீலர்களில் செல்லும் நபர்கள் குண்டு குழியுமான ரோட்டால் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும், காயம் அடையும் சம்பவமும் கூட அவ்வப்போது நடப்பது சோகமான விஷயமாகும்.

வெளியான வீடியோ
இதனால் தான் ஒவ்வொரு அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் கூட ரோடுகளை தரமாக போட்டு கொடுக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் உள்ள ரோடுகள் தொடர்ந்து குண்டும், குழியுமாக தான் இருக்கிறது. அந்த வகையில் தான் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உத்தர பிரதேச விஐபி பயணம்
இந்த வீடியோவானது உத்தர பிரதேச மாநிலம் சீதாபூரில் எடுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலமன உத்தர பிரதேசத்தில் உள்ள சீதாபூரில் அமைந்துள்ள ரோடு பள்ளங்கள் நிறைந்து பல்லாங்குழி போல் மிகவும் மோசமான வகையில் காட்சியளிக்கிறது. இந்த ரோட்டில் விஐபி ஒருவர் காரில் செல்ல அவரை பின்தொடர்ந்து பாதுகாவலர்கள், அவரது ஆதரவாளர்கள் காரில் செல்கின்றனர்.

கவிழ்ந்த ஆட்டோ
அப்போது எதிர்புறத்தில் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது. எதிரே விஐபிக்களின் கார்கள் அணிவகுத்து வருவதால் ஆட்டோ டிரைவர் அதில் இருந்து விலகி செல்ல முயன்றார். அப்போது ரோட்டில் உள்ள பள்ளத்தில் ஆட்டோவின் சக்கரம் இறங்கியது. இதனால் அடுத்த நொடியில் ஆட்டோ கவிழ்ந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று மக்களை மீட்டனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ரோடுகளை முறையாக அரசு சரிசெய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications