இது உபி அவலம்! மருத்துவமனையில் பாதியில் கட்டான கரண்ட்! ஜெனெரேட்டர் இல்ல.. மொபைல் டார்ச்சில் சிகிச்சை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மொபைல் டார்ச் லைட் கொண்டு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொது மருத்துவ வசதிகளை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேச மாநிலம் எப்போதும் மிகவும் மோசமான நிலையில்தான் இருந்து வருகிறது.
கடந்த மூன்றாண்டு கால தகவலின் அடிப்படையில் இந்தியாவில் மிக மோசமான பொது மருத்துவ கட்டமைப்பை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசமும், ராஜஸ்தானும்தான் முதலிடத்தில் உள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் கட்சி தலைவரை பாஜக மாற்றியது ஏன்? சாதிய அரசியலா? தேர்தல் வியூகமா?
மின்வெட்டு
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்ட மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மொபைல் போன் டார்ச் லைட்டுகளை கொண்டு சிகிச்சையளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமிருக்கின்றன. பலியா மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்ததையடுத்து அங்குள்ள இந்த மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மொபைல் டார்ச்
இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நோயாளிகள் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதில், ஒரு பெண்ணை மருத்துவ ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் கொண்டு வருகிறார்கள். அப்பெண்ணிற்கு என்ன ஆயிற்று என்பதை காண மருத்துவர் ஒருவர் செல்போன் டார்ச் மூலம் ஆராய்கிறார். இந்த காட்சிகள் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.
விளக்கம்
அதேபோல மற்றொருபுறம் நோயாளிகள் இருளில் அமர்ந்திருப்பது வீடியோவில் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி இருக்கிறது என்றும், ஆனால் அதற்கான பேட்டரிகளை கொண்டு வந்து பொருத்தி பின்னர் மின்சார இணைப்பு கொடுப்பதற்கு 15-20 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது என்றும் மாவட்ட மருத்துவமனையின் தலைமை பொறுப்பாளர் டாக்டர் ஆர்.டி.ராம் விளக்கம் தெரிவித்துள்ளார்.
மாநில நிலைமை
ஜெனரேட்டரில் பேட்டரி இல்லாமல் இருப்பது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "பேட்டரிகள் அதிகம் திருடுபோகும் அபாயம் உள்ளதால் அதனை தனியே எடுத்து வைத்திருக்கிறோம்" என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார். மேற்குறிப்பிட்டதைப்போல இம்மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் வெகு சாதாரணமாக நடைபெறுகின்றன. இதுகுறித்து தொடர் புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லையென பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.