பாஜகவுக்கு ஒரு நியாயம்; எங்களுக்கு ஒரு நியாயமா?.. தேர்தல் ஆணையத்தை விளாசிய அகிலேஷ்.. என்ன நடந்தது?
லக்னோ: கொரோனா கட்டுப்பாடுகளை மீறும் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது.
இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஏற்கனவே அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பா.ஜ.க மிக தீவிரமாக இருக்கிறது.
ஷாக்! இந்தியாவில் ஒரே வாரத்தில் 40% அதிகரித்த கொரோனா.. அதுவும் இந்த 3 மாநிலங்கள்தான் டாப்!
எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. காங்கிரசும் உ.பி.யில் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. இந்த கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
பல்வேறு கட்டுப்பாடுகள்
தற்போது கொரோனா காலம் என்பதால் முழுமையான கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. அதிகளவு கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கு கட்சிகள் பேரணியாக சென்று பிரசாரம் செய்ய கூடாது. கட்சி அலுவலகங்களில் கூட்டம் கூடக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இதற்கிடையே கடந்த சனிக்கிழமை அன்று கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதற்காக சமாஜ்வாடி கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
சமாஜ்வாடி கட்சிக்கு நோட்டீஸ்
அதாவது பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாடியில் ஐக்கியமான முன்னாள் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, 7 முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட சமாஜ்வாடி கட்சி கூட்டத்தில் தேர்தல் ஆணைய உத்தரவை மீறி கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். சமாஜ்வாடி கட்சியினர் என்று கூறப்படும் 2,500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி சமாஜ்வாடி கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசும் அனுப்பியது.
பாஜகவுக்கு ஒரு நியாயமா?
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சமாஜ்வாடிக்கு ஒரு நியாயம்; பாஜகவுக்கு ஒரு நியாயமா? என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார். உ.பி.யில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் விதிகளை மீறி பேரணி நடத்தியுள்ளார். இதில் பலர் கொண்டு கோஷங்கள் எழுப்பும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடவடிக்கை எடுப்பதில்லை
இந்த வீடியோ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அகிலேஷ் யாதவ், '' கொரோனா விதிகளை சமாஜ்வாடி கட்சியின் அலுவலகம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்ரோஹாவின் பாஜக வேட்பாளர் ஒருவர் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி ஆயிரம் பேரை கூட்டி பேரணி நடத்துகிறார். ஆனால் இவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை' என்று கூறினார்.
கொரோனா நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படியாத அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராக தேர்தல் ஆணையம் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்தார்.