மறைந்து போன மதமோதல் வடு- பாஜகவுக்கு காத்திருக்கும் பெரும் சவால்- மேற்கு உ.பி.யில் பிப்.10ல் தேர்தல்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதி தொகுதிகளில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் முசாபர்நகர் மத மோதல்களால் ஆதாயமடைந்த பாஜகவுக்கு இம்முறை மேற்கு உ.பி.தான் மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10-ந் தேதி தொடங்கி மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 10-ந் தேதி மொத்தம் 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இவை பெரும்பாலும் மேற்கு உ.பி. பகுதியை சேர்ந்தவை. சாம்லி, முசாபர்நகர், பக்பாத், மீரட், காசியாபாத், கவுதம் புத்தா நகர், ஹாபூர், புலந்த்சாகர், அலிகார், மதுரா மற்றும் ஆக்ரா மாவட்டங்கள்தான் முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்கின்றன.
விடாமல் சீண்டப்படும் தனுஷ் - ஐஸ்வர்யா.. புற்றீசல் போல சுற்றிய யூ டியூப் சேனல்கள்.. ஏன் இந்த வன்மம்?
மேற்கு உ.பி. ஜாட்கள்
நாம் குறிப்பிட்டுள்ள இந்த மாவட்டங்களில் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களான ஜாட், குஜ்ஜார், லோத், நிஷாத், மல்லா, காஷ்யப் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மை வாக்காளர்களாக உள்ளனர். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் கடந்த காலங்களில் பாஜகவுக்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தவர்கள் ஜாட் சமூகத்தினர். மொத்த மக்கள் தொகையில் 2% உள்ளனர். முன்னாள் பிரதமர் சரண்சிங் , ஜாட் சமூகத்தின் மிக முக்கியமான ஆளுமை. அவரது குடும்பத்தினர் இன்றளவும் ஜாட் சமூகத்தின் மீது செல்வாக்கை செலுத்தி வருகின்றனர். மேற்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கணிசமாக விரிந்து கிடக்கின்றனர் ஜாட்கள். அலிகார் மாவட்டம் இக்லாஸ் தொகுதியில் சுமார் 1 லட்சம் ஜாட்கள் இருக்கின்றனர். தலித்துகள் சுமார் 50,000 பேர் உள்ளனர். 3-வதாக பாகெல் சமூகத்தினர் சுமார் 30,000 பேர் உள்ளனர். இந்த 3 சமூகத்தினர்தான் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். சாம்லி தொகுதியில் 70,000 ஜாட்கள், 65,000 முஸ்லிம்கள், 20,000 குஜ்ஜார்கள், 25,000 காஷ்யப்கள், 45,000 தலித்துகள் உள்ளனர்.
பாஜக படைபரிவரங்கள்
இதனை கணக்கில் கொண்டே காஷ்யப், குர்ஜார், சைனி, ஜாதவ் (தலித்), முஸ்லிம் தலைவர்களை தேர்தல் பிரசாரத்துக்கு அனுப்புகிறது பாஜக. அதாவது ஜாட் சமூகத்தின் வாக்குகள் கிடைக்காமல் போனால் பிற சமூக வாக்குகளை வைத்து சமன் செய்து கொள்ளலாம் என்பது பாஜகவின் கணக்கு. பாஜகவின் நட்சத்திர தேர்தல் பிரசாரகர்களாக தர்மேந்திர பிரதான், முக்தார் அப்பாஸ் நக்வி, சஞ்சீவ் பல்யான், வி.கே.சிங், எஸ்.பி. பாகெல், நிரஞ்சன் ஜோதி என மத்திய அமைச்சர் பட்டாளம் இறக்கிவிடப்பட்டுள்ளது. உ.பி.தேர்தல் பொறுப்பாளராக ஓபிசி முகமாக அறியப்பட்டவர் தர்மேந்திர பிரதான், ராம்பூர் தொகுதி முன்னாள் எம்.பி. முக்தர் அப்பாஸ் நக்வி. மேற்கு உ.பி.யில் ஜாட் சமூக பாஜக முகமாக இருப்பவர் சஞ்சீவ் பல்யான். காசியாபாத் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் வி.கே.சிங். மற்றொரு ஜாட் தலைவரான மாநில அமைச்சர் பூபேந்திர சிங் செளத்ரியும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். குர்ஜார் சமூக வாக்குகளை இழுக்க மாநில அமைச்சர் அசோக் கட்டாரியாவை பாஜக களம் இறக்குகிறது. மொரதாபாத், பரேலி, மீரட் என குஜ்ஜார்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அசோக் கட்டாரியாவுக்கு செல்வாக்கு இருக்கிறது என நம்புகிறது பாஜக. இப்படி மேற்கு உ.பி.யில் மத்திய, மாநில அமைச்சர்கள் என ஒட்டுமொத்த படைபரிவாரங்களை பாஜக இறக்கினாலும் கள நிலவரம் அக்கட்சிக்கு சாதகமானது இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
முசாபர்நகர் மத மோதல்
2013-ம் ஆண்டு மிக மோசமான மதமோதலை எதிர்கொண்டது மேற்கு உ.பி.யின் முசாபர்நகர் பகுதி. ஜாட்கள், முஸ்லிம்கள் இடையேயான முசாபர்நகர் மத மோதல்களில் மொத்தம் 62 பேர் பலியாகினர். 50,000-க்கும் அதிகமானோர் இடம்பெயரவும் நேரிட்டது. ஜாட்கள், முஸ்லிம்கள் இடையேயான பிரிவினையானது 2017 சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பெரும் ஆதாயத்தை தேடிக் கொடுத்தது. 2018-ம் ஆண்டு ஜாட்கள், முஸ்லிம்கள் இடையே சமாதானம் ஏற்பட்டது. முசாபர்நகர் மத மோதல் வழக்கில் 2019-ம் ஆண்டு 7 முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மத மோதல்களால் பிரிந்து பின்னர் இணைந்த ஜாட்-முஸ்லிம்கள் பிணைப்பை விவசாயிகள் போராட்டம் மேலும் வலுவாக்கியது. ஜாட்களும் முஸ்லிம்களும் இணைந்து மத்திய பாஜக அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தை தீவிரமாக நடத்தினர். இந்த பிணைப்பானது தற்போது பாஜக எம்.எல்.ஏ.வை ஓட ஓட விரட்டியடிப்பது வரை நீடிக்கிறது.
Recommended Video
பாஜகவுக்கு அக்னி பரீட்சைதான்
மேற்கு உ.பி.யில் ஜாட்களின் ராஷ்டிரிய லோக் தள் கட்சி தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனால் அக்கட்சியை கூட்டணிக்குள் இழுக்க பெரும் போராட்டமே நடத்தியது பாஜக. ஆனால் விவசாயிகள் போராட்டம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அக்கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி உஷாராகி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்தார். இந்த களநிலவரத்தைப் புரிந்து கொண்டு ராஷ்டிரிய லோக் தள் கட்சிக்கு 19 தொகுதிகளை கொடுத்திருக்கிறார் அகிலேஷ். 2002-ம் ஆண்டு ராஷ்டிரிய லோக் தள் கட்சி மேற்கு உ.பி.யில் மட்டும் 14 தொகுதிகளில் வென்றது. ஆனால் 2017-ல் ஒரே ஒரு தொகுதியில்தான் அக்கட்சி வென்றது. மேலும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்கள் அலை அலையாக சமாஜ்வாதி கட்சிக்கு தாவியும் வருகின்றனர். சமாஜ்வாதி கட்சிக்கு யாதவர்கள் வாக்கு வங்கிகளாகவே இருக்கின்றனர். இப்போது யாதவர்கள் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், தலித்துகள், முஸ்லிம்கள் வாக்குகளும் பெருமளவு அகிலேஷ் அணிக்கு திரும்புகிற வகையில் தேர்தல் களத்தில் காற்று வீசுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அகிலேஷ் அணிக்கு இது தென்றல் காற்றாக இருக்கிறது; பாஜகவுக்கு அக்னி காற்றாக அனலடிக்கிறது. அதனால்தான் மேற்கு உ.பி. தேர்தல் களம் பாஜகவுக்கு அக்னி பரீட்சையாகவே இருக்கும் என்கின்றனர் அம்மாநில மூத்த பத்திரிகையாளர்கள்.