அப்துல் கலாம் ஒரு ஜிகாதி.. பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தார்.. பகீர் கிளப்பும் உபி கோயில் பூசாரி
லக்னோ: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஒரு ஜிகாதி என்றும் அவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தார் என்றும் உத்தரப் பிரதேச கோயில் பூசாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் குடியரசு தலைவராக 2002 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இருந்தவர் அப்துல் காலம். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், இஸ்ரோவில் பணிபுரிந்த காலத்தில் இந்தியா அணு ஆயுத சோதனை உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தது.
இந்நிலையில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஒரு ஜிகாதி என்று உத்தரப் பிரதேச கோயில் பூசாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் உயர் பொறுப்புகளில் இருக்கும் எந்தவொரு இஸ்லாமியரும் இந்தியா மீது பற்றுடன் இருக்க மாட்டார்கள் என்றும் அப்துல் கலாம் ஒரு ஜிகாதி என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அப்துல் கலாம் டிஆர்டிஓ தலைவராக இருந்தபோது, பாகிஸ்தானுக்காக அணுக்குண்டு ரகசியங்களை உளவு பார்த்தார் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே சென்றார். அப்துல் கலாம் குடியரசு தலைவராக இருந்தபோது, ராஷ்டிரபதி பவனில் இஸ்லாமியர்கள் புகார் அளிக்கத் தனியாக ஒரு அமைப்பை உருவாக்கி இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்துல் கலாம் மீது இப்படிப் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நபர் உத்தர பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள கோயிலில் பூசாரியாக உள்ளார். இந்தக் கோயிலில்தான், கடந்த சில நாட்களுக்கு முன் தண்ணீர் குடிக்க நுழைந்த சிறுவன் கொடூரமாகத் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.