135 ஆண்டு வரலாற்றில் முதல் முறை! காங்கிரஸ் இல்லாத உத்தரபிரதேச மேல்சபை! சொல்லியடித்து சாதித்த பாஜக
லக்னோ: உத்தர பிரதேச மாநில மேல்சபையின் 135 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பாஜக கூ வரும் நிலையில் முதல் முறையாக உத்தர பிரதேச மேல்சபையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மத்தியில் கடந்த 2014ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்தது. அன்று முதல் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து வருகிறது.
2014 தேர்தலில் சரிவை கண்ட காங்கிரஸ் கட்சி இன்னும் ஏற்றம் பெறவில்லை. 2014ம் ஆண்டுக்கு பிறகு ராஜஸ்தான் உள்பட சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. மாறாக பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து வருகிறது.
விலையை ஏற்றி அன்பை பொழிகிறார் மோடி.. சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு! விளாசிய திரிணாமுல் காங்கிரஸ்!
காங்கிரஸ் இல்லாத இந்தியா என பாஜக சூளுரை
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் பரந்து விரிந்து ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி கடந்த 8 ஆண்டுகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்கு ஏற்ப தான் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட அனைவரும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாகவே சில இடங்களில் பேசியுள்ளார்.
உபியில் செல்வாக்கு இழக்கும் காங்கிரஸ்
இதற்கு ஏற்ப காங்கிரஸ் கட்சியும் தேய்ந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அதிக சட்டசபை, மக்களை தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதியில் ராகுல்காந்தி தோற்றார். ராஜீவ் காந்தி, சோனியாகாந்தியை தொடர்ந்து ராகுல்காந்தி வென்ற இந்த தொகுதி 2019 தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி ராணியின் வசம் சென்றது.
சட்டசபை தேர்தல் தோல்வி
அதன்பிறகு கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 399ல் தனித்து போட்டியிட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் 387 வேட்பாளர்கள் ‛டெபாசிட்' இழந்தனர். வெறும் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. முந்தைய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் இது தற்போது 2 ஆக குறைந்துள்ளது. இதனால் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டி உள்ளது.
மேல்சபையில் உறுப்பினர் இல்லை
இந்நிலையில் தான் தற்போது உத்தர பிரதேச மாநில மேல்சபையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் சார்பில் தீபக்சிங் என்பவர் மட்டுமே எம்எல்சியாக செயல்பட்டு வந்தார். இவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதன்மூலம் உத்தர பிரதேசத்தின் மேல்சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
135 ஆண்டு வரலாற்றில் முதல் முறை
இந்த மேல்சபையானது 1887ல் உருவாக்கப்பட்டது. முதன் முதலில் 9 உறுப்பினர்களுடன் இச்சபை செயல்பட்டது. அன்று முதல் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் உள்ளது. அன்று முதல் தொடர்ந்து உத்தர பிரதேச மேல்சபையில் காங்கிரஸ் கட்சிக்க பிரதிநிதிகள் இருந்த வந்த நிலையில் 135 ஆண்டு கால வரலாற்றில் தற்போது அது இல்லாத நிலை உருவாகி உள்ளது. தற்போது 100 உறுப்பினர்களை கொண்ட இந்த சபையில், 72 உறுப்பினர்களுடன் ஆளும் பாஜக வலிமையாக உள்ளது. இதற்கு அடுத்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர்.
துரதிர்ஷ்டவசமானது
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் ஆராதனா மிஸ்ரா மோனா கூறுகையில், ‛‛இது துரதிர்ஷ்டவசமானதோடு மிகவும் துயரமானது. இருப்பினும் சட்டசபையில் போதிய உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தாலும் கூட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஆசிரியர்கள் ஒதுக்கீட்டில் மேல் சபைக்கு காங்கிரஸ் உறுப்பினரை அனுப்ப முயற்சிப்போம்'' .என்றார்.