இடிந்து விழுந்த மூன்று மாடி கட்டிடம்.. அதிகரிக்கும் உயிரிழப்பு.. உ.பி.யை உறைய வைத்த கோர விபத்து
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ, டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் திடீரென்று நேற்று (சனிக்கிழமை) இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 28க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான லக்னோவில், டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதி உள்ளது. அங்கு ராகேஷ் சிங்வால் என்பவருக்கு சொந்தமான 'ஹர்மிலாப் பில்டிங்' என்றழைக்கப்படும் மூன்று மாடி கட்டிடம் இருந்தது. அந்தக் கட்டிடம் மருத்துவ உபகரண பொருட்களின் வணிகத்துக்கான குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. நேற்று மாலை அந்தக் கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது.

இந்த பெரும் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால், மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தால் அந்த இடத்தில் கடுமையான பதற்றம் நிலவியது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 28 பேர் காயமடைடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், லக்னோ மக்களவை உறுப்பினருமான ராஜ்நாத் சிங், உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங் தன் எக்ஸ் தள பக்கத்தில், "லக்னோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
இது தொடர்பாக லக்னோ மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசி மூலம் தகவலை கேட்டறிந்தேன். உள்ளூர் நிர்வாகம் அங்கு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவி அளிக்கப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.
.
விபத்து என்றதும் அது பழைய கட்டிடமாக இருக்குமோ என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அப்படி இல்லை. இதுகுறித்து லக்னோ மாவட்ட ஆட்சியர் சூர்யபால் கங்வார் கூறுகையில், "தற்போது விபத்து நிகழ்ந்துள்ள கட்டிடம் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்புதான் கட்டப்பட்டது. அன்றைய தினம் அங்கு கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது." என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் ராகேஷ் சிங்வால் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. முதலில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருந்த மேலும் மூன்று உடல்கள் இன்று மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, தனி கமிட்டி அமைத்து விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு கூறியுள்ளது. இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications