ஆக்சிஜன் உதவி கோருபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை.. யோகி அரசுக்கு எதிராக.. ஹைகோர்டில் பொதுநல வழக்கு
லக்னோ: தனது குடும்பத்தினருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என ட்விட்டரில் பதிவிட்ட நபர் மீது யோகி அரசு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனாவின் கோர தாண்டவம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தைக் கடந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. மேலும், நாட்டின் பல பகுதிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச அரசு
டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அவலங்களும் நடந்துள்ளன. இருப்பினும் உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றே அம்மாநில அரசு கூறி வருகிறது. மேலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு எனப் போலி செய்திகளைப் பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

பொதுநல வழக்கு
உத்தரப் பிரதேசத்தில் குடும்பத்தினருக்கு ஆக்சிஜன் தேவை என ட்விட்டரில் உதவி கேட்ட நபர் மீது அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்சிஜன் உதவி தேவை என பதிவிடுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக சாகேத் கோகலே என்பவர் அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கைத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஆக்சிஜன் தேவை
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சஷாங்க் யாதவ் என்பவர் தனது தாத்தாவுக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆக்சிஜன் தேவை என நடிகர் சோனு சூட்டை டேக் செய்து முதலில் ட்வீட் செய்திருந்தார். பின், சஷாங்க் யாதவ் குடும்பத்தினருக்கு ஆக்சிஜன் தேவை என அமைச்சர் ஸ்மிதி இராணியை டேக் செய்து செய்தியாளர் ஒருவரும் ட்வீட் செய்தார். எந்த ட்வீட்களிலும் கொரோனா என்ற சொல்லைகூட அவர்கள் பயன்படுத்தவில்லை,

உயிரிழந்தார்
சுமார் 30 நிமிடங்கள் பிறகு ஸ்மிதி இராணி தனது ட்விட்டரில், சஷாங்க் யாதவை தொடர்புகொள்ளப் பல முறை முயன்றதாகவும் இருப்பினும் அவர் போனை எடுக்கவில்லை என்று பதிவிட்டிருந்தார். இருப்பினும், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய உபி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், அதற்குள் சஷாங்க் யாதவ்வின் தாத்தா உயிரிழந்துவிட்டார்.

போலீஸ் வழக்குப்பதிவு
இவர் மீது தான் உத்தரப் பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சஷாங்க் யாதவ்வின் தாத்தா கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் மாரடைப்பு காரணமாகத் தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர். பொய்யான தகவல்களைப் பரப்பி மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என்பதைப் போல தோற்றத்தை உருவாக்க முயல்வதாக குற்றஞ்சாட்டி அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications