அரசு பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை.. முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி.. யோகி ஆதித்யநாத் அதிரடி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அரசு பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவதாகவும், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் துறை வாரியாக காலியாக இருக்கும் பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. சில பணிகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் நேர்க்காணல் முறையிலும், சில பணிகளுக்கு எழுத்து தேர்வு அடிப்படையிலும் ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சிறுபான்மையினர் மற்றுமு் டெக்னிக்கல் கல்வித்துறையில் ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு 240 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பணி நியமன ஆணைகள் வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
மாநிலத்தில் சிறுபான்மை மற்றும் தொழில்நுட்பக் கல்வி துறையில் இளநிலை உதவியாளர் மற்றும் கணினி ஆபரேட்டர் பணிகளுக்கு 'மிஷன் ரோஸ்கர்' திட்டத்தின் கீழ் 240 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு என்பது வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் நடந்து வருகிறது.
மாநிலத்தில் வேலையில்லாத தனிநபர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறோம். பணி நியமனத்தில் யாருடைய தலையீடும் இல்லாத நிலை வேண்டும். அதனை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். அமைச்சர், செயலாளர்கள் உள்பட யாருக்கும் ஒருவர் எங்கு நியமனம் செய்யப்படுகிறார் என்ற விபரம் முன்கூட்டியே தெரியாது. இதன்மூலம் நியாயமான முறையில் பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அதோடு பாஜக அரசு என்பது ஏழைகள், ஆதரவற்றறோர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கையை நிலையை உயர்த்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியாளர்களை போல் மாபியாக்கள், குற்றவாளிகள் மீது நாங்கள் அக்கறை கொண்டவர்களாக இல்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் உத்தர பிரதேசம் என்பது பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நீதிபதிகள் நியமனம் வெறும் 6 மாதங்களில் நிறைவடைந்துள்ளது. ஆனால் முந்தைய ஆட்சியாளர்கள் கம்ப்யூட்டர் பற்றிய அறிவு இல்லாதவர்களை கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு நியமனம் செய்தனர். இதனால் பணிகள் முடங்கின. இத்தகைய தவறுகளை இந்த அரசு ஒருபோதும் செய்யாது. ஒவ்வொரு பணிக்கும் திறமையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications