ஆபிஸ பூட்டிட்டு கிளம்புங்க.. ஏன்னா வருவது அலை அல்ல புயல்-பாஜகவுக்கு பூட்டை அனுப்பிய சமாஜ்வாடி தலைவர்
லக்னோ: பாஜக தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வரும் சூழலில் சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஐபி சிங், பாஜக தலைமையகத்திற்குப் பூட்டு ஒன்றைப் பரிசாக அனுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேசம். பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஏற்கனவே சில வாரங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் செய்து வந்தன.
இந்நிலையில், கடந்த வாரம் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான உடன் உபி-இல் அரசியல் களம் மேலும் பரபரப்பானது. வெறும் சில நாட்களில் அங்குப் பல மாற்றங்கள் நடந்து வருகிறது.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளும் களத்தில் இருந்தாலும் கூட, அங்கு பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் ஒரே நாளில் ஒரு அமைச்சர் மற்றும் மூன்று எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகி சமாவஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலத்தில் சமாஜ்வாடி கட்சியில் மேலும் சில பாஜக தலைவர்கள் இணைவார்கள் சமாஜ்வாடி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பூட்டு
பாஜக தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வரும் சூழலில் சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஐபி சிங், பாஜக தலைமையகத்திற்குப் பூட்டு ஒன்றைப் பரிசாக அனுப்பியுள்ளார். உத்தரப் பிரதேச பாஜகவின் மாநில தலைவர் சுதந்திர தேவ் சிங்குக்கு இந்த பூட்டுப் பரிசாக அனுப்பப்பட்டுள்ளது. முதலில் அம்மாநில தொழிலாளர் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா பாஜகவில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து வெறும் சில மணி நேரத்தில் 3 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 10
இது குறித்து சமாஜ்வாடியின் ஐபி சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஓம்பிரகாஷ் ராஜ்பார், ஜெயந்த் சவுத்ரி, ராஜ்மாதா கிருஷ்ணா படேல், சஞ்சய் சவுகான், இப்போது சுவாமிபிரசாத் மௌரியா ஆகியோர் இப்போது சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளனர். நான் பாஜக தலைமையகத்திற்குப் பூட்டு ஒன்றைப் பரிசாக அனுப்பியுள்ளேன். மார்ச் 10க்கு (தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதி) பிறகு இதை அலுவலகத்திற்குப் போட்டு வீட்டுக்குப் போங்க. இது அலையல்ல, சமாவஜ்வாடியின் புயல்" என்று பதிவிட்டுள்ளார்

பாஜக அமைச்சர்
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பாஜக அரசு தலித்துகள், விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், இளைஞர்கள் நலனில் அக்கறை காட்டுவதில்லை எனக் குற்றஞ்சாட்டி உத்தரப்பிரதேச அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா கட்சியில் இணைந்து விலகுவதாக அமைச்சர் சுவாமி பிரசாத் மௌரியா ட்வீட் செய்தார். உபி தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பாஜகவில் இருந்து பலரும் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications