"உன் மனைவிக்கு வீடியோ அனுப்பட்டுமா?" மிரட்டிய பார்ட்னர் மீது ஆசிட் வீச்சு.. விபரீதமான தன்பாலின உறவு
விக்ரமை அவரது மனைவியிடம் இருந்து நிரந்தரமாக பிரிந்து வந்து தன்னுடன் இருக்குமாறு விகாஸ் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்துள்ளார்.
லக்னோ: தன்பாலின உறவு குறித்து தனது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்த போவதாக மிரட்டியதால் இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்ரம் (32). இவர் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கிறது.
அலுவலக நேரம் போக பெரும்பாலான நேரங்களை பேஸ்புக்கில் செலவிட்டு வருவதை விக்ரம் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

பேஸ்புக் பழக்கம்
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு பேஸ்புக்கில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த விகாஸ் (25) என்பவருடன் விக்ரமுக்கு பழக்கம் ஏற்பட்டது. விகாஸ் தன்பாலின உறவில் ஆர்வம் கொண்டவர் என்பதால் விக்ரம் உடனும் அதே நோக்கத்தில் விகாஸ் பழகி வந்துள்ளார். தன்பாலின சேர்க்கை தொடர்பான வீடியோக்களையும் விக்ரமுக்கு அவர் அனுப்பியுள்ளார். இதனால் ஒருகட்டத்தில், விக்ரமுக்கும், அவருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டது.

தன்பாலின உறவு
இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் தன்பாலின உறவில் இருந்துள்ளனர். வேலை நிமித்தமாக வெளியே செல்வதாக கூறி விக்ரமும் உத்தரபிரதேசத்துக்கு அடிக்கடி விமானத்தில் சென்று விகாஸை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும், விகாஸுக்கு அடிக்கடி பண உதவியும் விக்ரம் செய்து வந்திருக்கிறார். இந்த சூழலில், விக்ரமை அவரது மனைவியிடம் இருந்து நிரந்தரமாக பிரிந்து வந்து தன்னுடன் இருக்குமாறு விகாஸ் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்துள்ளார்.

வீடியோ அனுப்பப்போவதாக மிரட்டல்
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது ஒருகட்டத்தில், எந்தக் காரணத்தையும் கொண்டு மனைவி, குழந்தைகளை பிரிய முடியாது என விக்ரம் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த விகாஸ், அப்படியென்றால் நமது உடலுறவு வீடியோக்களை உனது மனைவிக்கு அனுப்பிவிடுவேன் என விகாஸ் மிரட்டியுள்ளார். ஒருவேளை, விகாஸ் அந்த வீடியோக்களை அனுப்பிவிட்டால் குடும்பத்தில் பெரிய பிரச்சினை ஏற்பட்டுவிடுமே என எண்ணிய விக்ரம் விகாஸுக்கு தகுந்த பாடம் கற்றுக்கொடுக்க எண்ணினார்.

ஆசிட் வீச்சு - கைது
அதன்படி, தனது நண்பன் மோஹித்துக்கு சிறிது பணம் கொடுத்து விகாஸ் மீது ஆசிட் வீசுமாறு கூறியுள்ளார் விக்ரம். இதையடுத்து, உத்தரபிரதேசத்தில் இருந்து ஹரியாணா சென்ற மோஹித், விகாஸின் வீட்டுக்கு சென்று அவர் முகத்தில் ஆசிட் வீசினார். இதில் அந்த ஆசிட் விகாஸ் முகத்திலும், அவரது தாயார் உடலிலும் பட்டது. இவர்களின் அலறல் சத்ததை கேட்ட அக்கம்பக்கத்தினர், அங்கு வந்து மோஹித்தை விரட்டி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், விக்ரம் கூறியதன் பேரிலேயே விகாஸ் முகத்தில் ஆசிட் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து, விக்ரமையும் போலீஸார் கைது செய்தனர். ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான விகாஸும், அவரது தாயாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications