தாங்கமுடியாத ‘ஈ’தொல்லை.. மீண்டும் தாய்வீட்டிற்கு ஓடும் மருமகள்கள்.. உ.பி.யில் சோகம்!
ஈ தொல்லையால் ஒரு கிராமத்து ஆண்களே மண வாழ்க்கை அமையாமல் அவதிப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
லக்னோ: ஈ தொல்லையால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட சில கிராமங்களுக்கு, அக்கம்பக்கத்தார் திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுக்கும் அவலநிலை காணப்படுவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமயங்களில் நாம் சின்ன ஈ தானே, கொசு தானே, எறும்பு தானே எனக் கடந்து போகும் விசயங்கள்தான், பின்னாளில் பூதாகரமானதாக மாறும். உத்தரப்பிரதேசத்தில் உள்ள சில கிராமங்களும் அப்படித்தான் ஈத்தொல்லையால் கடும் அவதிகளை சந்தித்து வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ளடு பதைய்யன் புர்வா கிராமம். கடந்த ஓராண்டாக இந்தக் கிராமத்தில் திருமணமே நடைபெறவில்லை.

ஈக்கள் பிரச்சினை
வழக்கமாக தண்ணீர்ப் பிரச்சினை, மின்சார பிரச்சினை போன்ற காரணங்களுக்காகத்தான் குறிப்பிட்ட ஊர்களில் தங்களின் மகளை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர் விரும்ப மாட்டார்கள். ஆனால், ஈக்கள் தொல்லையால் இது போல் ஒரு கிராமமே ஒதுக்கப்படுவது கேட்பதற்கு வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால் ஈக்களால் அக்கிராம மக்கள் அனுபவித்து வரும் வேதனைகளைக் கேட்டால்தான், அப்பிரச்சினையின் வீரியம் நமக்குப் புரியும்.

கோழிப்பண்ணைதான் காரணம்
கடந்த 2014ம் ஆண்டு அப்பகுதியில் கோழிப் பண்ணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிருந்துதான் இந்த ஈ பிரச்சினையும் அம்மக்களுக்கு ஆரம்பித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஈக்கள் தொல்லை அதிகரிக்க, பொறுக்க முடியாமல் போராட்டத்தில் குதிக்கும் அளவிற்கு பொங்கி எழுந்து விட்டனர் இந்த ஊர் மக்கள். ஆனாலும் இதற்கு ஒரு விடிவுகாலம் கிடைத்தபாடில்லை.

மீண்டும் அம்மா வீடு
ஈக்கள் தொல்லையால் இந்த ஊரில் உள்ள ஆண்களுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வருவதில்லையாம். ஏற்கனவே மணமாகி வந்த பெண்களில், இந்தாண்டு மட்டும் கிட்டத்தட்ட ஆறு பேர், ஈக்கள் தொல்லையால் மீண்டும் தங்களது தாய் வீட்டிற்கே திரும்பிச் சென்று விட்டார்களாம்.

மனைவிகளின் நிபந்தனை
திரும்ப வரும்படி கணவன்மார்கள் அழைத்தபோதும், 'ஒன்று அந்த ஊரை விட்டு வேறு ஊருக்குச் சென்று விடலாம்.. இல்லையென்றால் எங்களை மறந்து விடுங்கள்' எனக் கறாராகக் கூறி விட்டார்களாம் அப்பெண்கள். இந்த வருடம் மட்டும் இந்த ஊரில் ஒருவருக்கும் திருமணமே ஆகவில்லை என்றால் பிரச்சினை எவ்வளவு பெரிது எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கேள்விக்குறியான திருமணங்கள்
இந்த ஊருக்கு திருமணமாகி வரும் பெண்களுக்குத்தான் இப்படி ஒரு நிலைமை என்றால், இங்கிருந்து வேறு ஊருக்கு திருமணமாகி சென்றவர்களின் நிலையோ இன்னமும் பரிதாபம். தப்பித் தவறிக்கூட பெற்றோர் வீட்டுக்குச் செல்ல அப்பெண்களுக்கு அனுமதி கிடைப்பதில்லையாம். இப்படி ஒரு கிராமத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த ஈக்கள் தொல்லை.

தொடரும் போராட்டம்
தினமும் ஆயிரக்கணக்கான ஈக்கள் மொய்ப்பதால், பெரும் பிரச்சினைக்கு ஆளாகி வரும் இப்பகுதி மக்கள் தொடர்ந்து தங்களுக்கு விடிவுகாலம் கேட்டு, கிராமத்திற்கு வெளியே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வீட்டில் உள்ள பெண்களும் சமையல் வேலை முடித்துவிட்டு இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்கின்றனராம்.

அக்கம்பக்கத்து கிராமங்கள்
பதைய்யன் புர்வா கிராமம் மட்டுமின்றி, குயியன், பட்டி, தாஹி, சேலம்பூர், ஜல்புர்வா, நயா கான் என சுற்றுவட்டாரத்தில் உள்ள மேலும் சில கிடாமங்களும் இதேபோன்ற ஈக்கள் தொல்லையால் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கிராமங்களுக்கும் பெண் கொடுக்க யாரும் விரும்புவதில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோய்ப் பிரச்சினை இல்லை
இந்தப் பிரச்சினை பற்றி அப்பகுதி அரசு அலுவலர்கள் கூறுகையில், 'எத்தனையோ விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி விட்டோம். சம்பந்தப்பட்ட ஈக்களால் மோசமாக நோய்த்தாக்கம் ஏதும் ஏற்படவில்லை' என்கின்றனர். ஆனாலும் எல்லாப் பொருட்களிலும் ஈக்கள் அமர்வது, அதுவும் ஒன்று இரண்டல்ல ஆயிரக்கணக்கான ஈக்கள் அமர்வது தொல்லையாக இருப்பதாக தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.












Click it and Unblock the Notifications