ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலி.. புயலை கிளப்பிய டாக்டர் கபீல் கான், யோகிக்கு எதிராக போட்டி?
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிட தயார் என்று மருத்துவர் கஃபீல் கான் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு, யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற ஐந்து மாதங்களில் கோரக்பூர் நகரத்தில் உள்ள பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்தனர்.
ஒரே நாள் இரவில் 23 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று கூறி குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல்கான் உட்பட ஒன்பது பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களில் கஃபீல் கான் கைதுசெய்யப்பட்டார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தான் குழந்தைகள் இறந்தார்கள் என்பதை மருத்துவர் கஃபீல்கான் தெரிவித்தார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை
நிலுவைத்தொகையை மருத்துவமனைத் தராததால், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் தராமல் இருந்திருக்கிறது. இதையடுத்து மருத்துவர் கஃபீல் கான் தனியான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிக் கொடுத்தார். ஆனால் குழந்தைகள் இறப்புக்கு கஃபீல் கான்தான் காரணம், அவரின் அஜாக்கிரதையால் தான் குழந்தைகள் இறந்தனர் என்று கூறி அவரை உத்தரப்பிரதேச அரசு கைது செய்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்களில், கஃபீல் கான் தவிர மற்ற அனைவரும் கடந்த 2019-ம் ஆண்டு பணியில் சேர்க்கப்பட்டனர். சிறையில் இருந்த கஃபீல் கான் மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை.

மருத்துவர் கஃபீல் கான்
அதனால், கஃபீல்கான் அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் சிறையிலிருந்து விடுவிக்கப்படாமல் இருந்தார். உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு மருத்துவர் கஃபீல் கான் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், பணியில் மட்டும் இன்னும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இதற்கிடையே, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். அதன் பிறகு அலகாபாத் உயர் நீதிமன்றம் கஃபீல் கான் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்துசெய்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

விசாரணை
மருத்துவர் கஃபீல் கான் மீது ஒன்பது விசாரணைகள் நடத்தப்பட்டன. இவற்றில் எதிலும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கவில்லை. எனவே, அவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளும்படி அகில இந்திய குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம் உத்தரப்பிரதேச அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. டாக்டர் கஃபீல் கானுடன் சேர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டிருப்பதையும் அந்த சங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது. மருத்துவர் கஃபீல் கான் பணியில் சேராமலேயே இருக்கிறார்.

யோகியை எதிர்த்து
தற்போது 5 ஆண்டுகளாக பணியிடை நீக்கத்தில் இருந்து வரும் கஃபீல் கான், கோரக்பூரில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக போட்டியிட எந்த கட்சி தனக்கு வாய்ப்பளித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், உத்திரப்பிரதேச காங்கிரஸ் தரப்பில் மருத்துவர் கஃபீல் கான் யோகியை எதிர்த்துப் போட்டியிடலாம், அதற்கு சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications