உத்தர பிரதேசத்தில்.. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய யோகி அரசின் அதிரடி நடவடிக்கை! குவியும் பாராட்டு
லக்னோ: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உத்தரப் பிரதேச அரசு புதியதொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
இருந்த போதிலும், குறிப்பிட்ட வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகவே உள்ளது. இதனிடையே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உத்தரப் பிரதேச அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
இரவு பணி
அதாவது பெண் ஊழியர்களின் அனுமதியின்றி அவர்களை இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பணி செய்யக் கட்டாயப்படுத்த முடியாது என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. பெண் ஊழியர்கள் அலுவலகத்தில் பணிபுரிந்தால், அவர்களுக்கு இலவசமாக வாகன வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு அரசு மட்டுமின்றி தனியார் அலுவலகங்களிலும் பொருந்தும் என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வசதிகள்
மேலும், இரவு ஷிப்டுகளில் (இரவு 7 மணிக்குப் பிறகு) வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு முறையான கழிவறைகள் மற்றும் ஓய்வறைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இது தவிர, அவர்களுக்கு இலவச போக்குவரத்து மற்றும் உணவு வழங்கப்படுவதையும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். தற்போது தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் இரவு 7 மணிக்கு மேல் பெண்கள் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த உத்தரவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
குறைந்தது 4 பேர்
இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு முறையான கண்காணிப்பு வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 4 அல்லது அதற்கு மேற்பட்ட பெண் ஊழியர்கள் இருக்கும்போது மட்டுமே பெண் ஊழியர்களை இரவு பணிக்க வரச் சொல்ல வேண்டும். பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் நடைபெறாமல் இருக்க நிறுவனங்கள் இதற்கென ஒரு குழுவை உருவாக்க வேண்டும்.
பணி நீக்கம் செய்ய முடியாது
அதேநேரம் எந்தவொரு பெண் தொழிலாளர்களையும் இரவு பணி செய்யக் கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும், இரவு பணிக்கு வரவில்லை என்று கூறி யாரையும் பணிநீக்கமும் செய்யக் கூடாது என்று உபி அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும், அலுவலகத்தில் பெண்களுக்கு என முறையாகக் குளியலறை மற்றும் உடை மாற்றும் அறைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உபி அரசு
இது குறித்து அம்மாநிலத்தின் கூடுதல் செயலாளர், சுரேஷ் சந்திரா கூறுகையில், "முன்பு, ஒவ்வொரு நிறுவனங்களும் இரவு ஷிப்ட்களில் பெண்களை அமர்த்த வேண்டும் என்றால் தொழிலாளர் அதிகாரி தொடங்கி பலரிடம் ஒப்புதல் பெற வேண்டி இருந்தது. இப்போது அந்த நடைமுறையை எளிமையாக்கி உள்ளோம்" என்றார்.