பப்ஜிக்கு செல்போன் கொடுக்காத தாய் சுட்டுக்கொலை! 2 நாள் பிணத்தை மறைத்த சிறுவனின் ‛திடுக்’ காரியம்!
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பப்ஜி விளையாட செல்போன் வழங்க மறுத்த தாயை, 16 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மேலும் அவரது உடலை அறையில் வைத்து பூட்டி 2 நாள் பிணத்தோடு வசித்ததோடு, நண்பரை அழைத்து வந்து முட்டை கறி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அதோடு, வீட்டில் துர்நாற்றம் வீசுவதை கட்டுப்படுத்த ரூம் ப்ரெஷ்னரை பயன்படுத்திய திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவனது தந்தை மேற்குவங்க மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இதனால் சிறுவன் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வீட்டில் வசித்து வந்தான்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வீட்டில் இருந்து சிறுவனின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் வெளியே வரவில்லை. மேலும் சிறுவனின் நடவடிக்கையிலும் மாற்றம் தெரிந்தது.

வீட்டில் துர்நாற்றம்
இதற்கிடையே வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு சிறுவன் இருந்தான். வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்து அதிகளவில் துர்நாற்றம் வீசியது. அந்த அறையை அவர்கள் திறந்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இறந்து கிடந்த தாய்
அந்த அறையின் உள்ளே சிறுவனின் தாய் இறந்து கிடந்தார். உடல் அழுக தொடங்கி இருந்தது. மேலும் இன்னொரு அறையில் இருந்த சிறுமியை அவர்கள் மீட்டனர். இதுதொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தாயை சுட்டுக்கொன்ற மகன்
மேலும் சம்பவம் குறித்து சிறுவனிடம் போலீசார் விாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது சிறுவனே தனது தாயை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பப்ஜிக்கு செல்போன் கொடுக்க மறுப்பு
கைதான சிறுவன் பப்ஜி விளையாட்டுக்கு மிகவும் அடிமையாகி இருந்தான். இதனை அவனது தாய் கண்டித்தார். மேலும் சிறுவனின் தாய் பப்ஜி விளையாட செல்போன் வழங்காமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சிறுவன் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த தனது தந்தையின் லைசென்ஸ் துப்பாக்கியை எடுத்து சுட்டு கொலை செய்தார்.

முட்டை கறி ஆர்டர் செய்து சாப்பாடு
அதன்பிறகு பயந்துபோன சிறுவன் தனது தாயின் உடலை வீட்டில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்தார் மேலும் சகோதரியையும் அவர் வீட்டில் உள்ள இன்னொரு அறையில் பூட்டி மிரட்டி வைத்தார். மேலும் ஒன்றும் நடக்காதது போன்று காட்டிக்கொள்ள சிறுவன் தனது 2 நண்பர்களை வீட்டுக்கு அழைத்துள்ளார். அவர்கள் 3 பேரும் வீட்டில் திரைப்படம் பார்த்து முட்டை கறி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். இந்த வேளையில் சிறுவனிடம் அவனது நண்பர்கள் அம்மா பற்றி கேட்டதற்கு, அவர் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளதாக சமாளித்துள்ளார்.

ரூம் ப்ரெஷ்னர் பயன்பாடு
இதற்கிடையே தான் 2 நாளில் வீட்டில் துர்நாற்றம் வீச துவங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் ரூம் ப்ரெஷ்னரை வீடு முழுவதும் பயன்படுத்தி துர்நாற்றத்தை கட்டுப்படுத்தினார். இருப்பினும் துர்நாற்றம் வெளியே வந்ததால் சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. பப்ஜி விளையாட செல்போன் கொடுக்காத தாயை, 16 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து 2 நாள் பிணத்துடன் வசித்ததோடு, நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து உணவு ஆர்டர் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications