உ.பி. பஞ்சாயத்து தேர்தல்: உன்னாவ் பலாத்கார வழக்கு குற்றவாளியின் மனைவிக்கு டிக்கெட் கொடுத்த பாஜக
லக்னோ: நாட்டையே அதிரவைத்த உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளியாகிய மாஜி பா.ஜ.க.எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்காரின் மனைவி உத்தரப்பிரதேச மாநில பஞ்சாயத்து தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம் பெண், தாம் 17 வயது சிறுமியாக இருந்த போது எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்காரால் 2017-ல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறினார். இது தொடர்பான புகாரை உத்தரப்பிரதேச போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.
ஒருகட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீடு முன்பாக அந்த இளம் பெண் தீக்குளிக்க முயன்றார். பின்னர் இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளானது. இதையடுத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து லக்னோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அப்போது பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்ற வாகனம் மீது லாரி மோதியது. இதில் இளம்பெண்ணின் உறவினர்கள் 2 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் புகார் சொன்ன இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரமும் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டடது.
இதனையடுத்து இளம்பெண் தொடர்பான அனைத்து வழக்குகளும் டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இது தொடர்பான 5 வழக்குகளில் 2-ல் தீர்ப்பு வழங்க்கப்பட்டுள்ளது. ஒன்றில் குல்தீப்சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனையும் மற்றொன்றில் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது குல்தீப்சிங் சிங்கார் சிறையில் இருந்து வருகிறார். அவரை ஏற்கனவே கட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி நீக்கியும் இருக்கிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. ஃபதேபூர் சவுர்சாய் இடத்துக்கு போட்டியிட குல்தீப்சிங் செங்காரின் மனைவி சங்கீதாவுக்கு பாஜக டிக்கெட் கொடுத்துள்ளது.
தற்போது உன்னாவ் ஜில்லா பஞ்சாயத்து தலைவராக சங்கீதா இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.