தற்கொலைக்கு பழிவாங்க தற்கொலை நாடகம் போட்ட இளம்பெண்! த்ரில்லர் மூவியை மிஞ்சிய சம்பவம்.. அதிரும் லக்னோ
லக்னோ: தன்னை போன்றே உடல் அமைப்பை கொண்ட இளம் பெண்ணை கொன்றுவிட்டு நாடகமாடிய காதல் ஜோடியை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சூரஜ்பூரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஹேமா சவுத்ரி (28). இவர் நொய்டாவில் ஒரு வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தார்.
இதனிடையே கடந்த நவம்பர் 12 ஆம் தேதி ஹேமா சவுத்ரி பணி முடிந்து வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
கொடநாடு கொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணை.. அரசு தரப்பில் வைத்த முக்கிய கோரிக்கை.. அப்டேட் என்ன?
வழக்குப் பதிவு
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஹேமா காணாமல் போன அன்று அவர் கடைசியாக பார்த்த நபர் அஜய் தாகூர் என்பது தெரியவந்தது. 27 வயதான அந்த இளைஞர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் அஜய்யையும் அவரது காதலியையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் திடுக்
இதையடுத்து அஜயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகின. அந்த தகவல்களை கேட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அஜய் தாகூரின் காதலி பயல் பாஹ்தி (22). பயலின் பெற்றோர் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டனர். தனது உறவினரான சுனில் என்பவரிடமிருந்து பயலின் பெற்றோர் ரூ 5 லட்சம் கடன் வாங்கியுள்ளனராம்.
பணம் கேட்ட நபர்
கடனை திருப்பி தரும்படி பயலின் பெற்றோரிடம் சுனில் கேட்டதாக தெரிகிறது. அது போல் பயலின் அண்ணி, அவரது 2 சகோதரர்களளும் பயலின் பெற்றோருக்கு ஒரு வகையில் ஏதோ தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து வீட்டில் பிரச்சினை நிலவி வந்ததால் பயலின் பெற்றோர் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலைக்கு பழி
தனது பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்கள் சுனில், தனது அண்ணி, அவரது இரு சகோதரர்களை பழி வாங்க வேண்டும் என பயல் திட்டமிட்டிருந்தார். இதற்காக பிரம்மாண்டமான திட்டத்தை தீட்டியுள்ளார். தான் சிக்காமல் தனது பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான அனைவரையும் கொலை செய்ய பயல் முடிவு செய்தார்.
போலீஸிடம் சிக்காமல் இருக்க
இதை தனது காதலனான அஜய்யிடமும் கூறினார். தான் போலீஸில் சிக்காமல் தனது உறவினர்களை பழிவாங்க பயல் திட்டம் தீட்டினார். அந்த சமயத்தில் பயல், அஜய்யுடன் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஷாப்பிங் மாலிற்கு சென்றுள்ளனர். அப்போது தன்னை போன்றே இருக்கும் ஹேமா சவுத்ரியை பயல் பார்த்துள்ளார். உடனே தனது காதலன் அஜய்யிடம் அந்த பெண்ணை காண்பித்துள்ளார்.
ஹேமா கொலை
தன்னை போல் தோற்றம் கொண்ட ஹேமாவை கொலை செய்துவிட்டு இறந்தது பயல்தான் என நம்ப வைக்க காதலன் அஜய்யுடன் சேர்ந்து பயல் திட்டம் தீட்டினார். இதனால் அஜய் தாகூரும் ஹேமாவுடன் நட்பாக பழகத் தொடங்கியுள்ளார். கடந்த 12 ஆம் தேதி ஹேமாவை பைக்கில் உட்கார வைத்துக் கொண்டு காதலி பயலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
சூடான எண்ணெய்
அங்கு வீட்டில் ரெடியாக இருந்த பயல், காதலன் அஜய்யுடன் சேர்ந்து ஹேமாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். ஹேமாவை கொலை செய்த பிறகு அவரது முகத்தில் கொதிக்கும் சமையல் எண்ணெய்யை ஊற்றி சிதைத்துள்ளனர். பின்னர் இறந்த ஹேமாவுக்கு தனது ஆடையை பயல் அணிவித்துள்ளார். மேலும் சூடான எண்ணெய் என் முகத்தில் பட்டுவிட்டதால் முகத்தின் அழகு பாதிக்கப்பட்டுள்ளது.
திருமணம்
இந்த உலகம் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்வதால் பயல் தன் கைப்பட கடிதம் எழுதி வைத்து அதில் கையெழுத்திட்டிருந்தார். அந்த கடிதத்தை ஹேமாவின் சடலத்தின் அருகில் வைத்துவிட்டு தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பயல் கிரேட்டர் நொய்டாவில் ஒரு வழிபாட்டு தலத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
முகம் சிதைந்த நிலை
இந்த நிலையில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த ஹேமாவை பயல் என உறவினர்கள் நினைத்தனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுத்து ஹேமாவை பயல் என நினைத்து அடக்கமும் செய்து விட்டனர். வணிக வளாகத்தில் வேலை செய்து வந்த ஹேமா வீடு திரும்பாததால் இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் ஹேமாவை அஜய் அழைத்து சென்றது தெரியவந்தது.
அதிர்ச்சி
இதையடுத்து அஜய்யை தேடிய போலீஸார் காசியாபாத் அருகே ஒரு வாகன சோதனைச் சாவடியில் கைது செய்தனர். உடன் இருந்த பயலும் கைது செய்யப்பட்டார். இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். உருவ ஒற்றுமையை பயன்படுத்தி கொலை செய்து விட்டு நாடகமாடிய இளம் பெண் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.