"அயோத்தி ராமர் கோயிலுக்கு பின்னரே.. காசி, மதுரா ஜென்ம பூமி விவகாரம் எழுந்துள்ளன!" முதல்வர் யோகி பரபர
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கிருஷ்ண ஜென்ம பூமி குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
ராமர் பிறந்ததாகக் கருதப்படும் அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த கட்டுமான பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல மதுராவில் உள்ள ஷாஹி இத்கா என்ற மசூதி அருகே தான் கிருஷ்ண ஜென்ம பூமி அமைந்துள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில்.. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய யோகி அரசின் அதிரடி நடவடிக்கை! குவியும் பாராட்டு
யோகி ஆதித்யநாத்
இந்நிலையில், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "உத்தரப் பிரதேசத்தில் எந்த வகுப்புவாத கலவரமும் இல்லை. கடந்த காலங்களில் இஸ்லாமியப் பண்டிகையான ஈத் தினத்தன்று சாலைகளில் நமாஸ் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல்முறையாகச் சாலைகளில் நமாஸ் நடத்தப்படவில்லை. நமாஸ் உள்ளிட்ட மத சார்ந்த நிகழ்வுகளை மசூதிக்குள் தான் நடத்த வேண்டும்.
காசி
காசி விஸ்வநாதர் கோயில் புதிய நடைபாதை திறக்கப்பட்ட பின்னர், தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் காசிக்கு வருகை தருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் கனவுக்கு ஏற்ப காசி தனது முக்கியத்துவத்தை நிரூபித்து வருகிறது. மாநிலத்தில் ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது. அதேபோல மாநிலம் முழுவதும் தேவையற்ற சத்தம் எழுப்பியதும் அகற்றப்பட்டது" என்று மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதைக் குறிப்பிட்டு அவர் பேசினார்.
அயோத்தி ராமர் கோயில்
தொடர்ந்து பேசிய அவர் "அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் இப்போது மதுரா பிருந்தாவனம், விந்திய வாசினி தாம், நைமிஷ் தாம் போன்ற அனைத்து புனித யாத்திரை மையங்களும் விழித்துக் கொண்டிருக்கின்றன. வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு இப்போதிலிருந்தே தயாராக வேண்டும். மாநிலத்தில் குறைந்தது 75 இடங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு பணியாற்ற வேண்டும்.
2024 மக்களவை தேர்தல்
மக்களின் ஆதரவாலும் கொரோனா சமயத்தில் நமது கடின உழைப்பாலும், சட்டமன்றத் தேர்தலில் சிறந்த முடிவுகளைப் பெற்றோம். 2024 பொதுத் தேர்தலில், இதேபோன்ற வெற்றியை நாம் பெற வேண்டும். இதற்காக நாம் உழைக்க வேண்டும். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்த பின்னர், இங்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் தான் உபி மீதான எண்ணம் மற்ற மாநில மக்களுக்கு மாறியது" என்று அவர் தெரிவித்தார்.