உ.பி தேர்தல் ட்விஸ்ட்.. "நான் இதனால் தான் பாஜகவில் இருந்து விலகினேன்.. " மூத்த தலைவர் ஓபன் டாக்
லக்னோ: பாஜகவில் இருந்து விலகிய சமாஜ்வாடி கட்சியில் சேர உள்ள பாஜக மூத்த தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா, தேர்தலுக்கு முன் ஏன் பாஜகவில் இருந்து விலகினேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் தான் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த 5 மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் மீது தான் பலரது கவனமும் குவிந்துள்ளது. ஏனென்றால் கடந்த பல தேர்தல்களாகவே அங்கு எந்தவொரு கட்சியும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது இல்லை.

உத்தரப் பிரதேசம்
அதேபோல பிரதமர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரணாசி தொகுதி உள்ள மாநிலம் என்பதாலும் உபி தேர்தலுக்குப் பலரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அங்கு பல்வேறு கட்சிகளும் களத்தில் இருந்தாலும் கூட, பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த முறை எப்படியாவது ஆட்சிய பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் சமாஜ்வாடி மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

அமைச்சர் விலகல்
இப்படிப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் நான்கு எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2017 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான். பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி சுவாமி பிரசாத் மவுரியா பாஜகவில் இணைந்திருந்தார். இப்போது மீண்டும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு அவர், பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சிக்குச் சென்றுள்ளார்.

முக்கிய தகவல்
இந்நிலையில், தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஏன் கட்சி மாறினேன் என்பது குறித்து சுவாமி பிரசாத் மவுரியா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகும்போது அது தான் உ.பி.யில் நம்பர் 1 கட்சியாக இருந்தது. ஆனால் இப்போது அவர்களைக் காணவில்லை. நான் பாஜகவில் இணைந்த போது, அவர்கள் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியை அமைத்தனர். ஆனால் அவர்கள் (பாஜக) மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டனர்.

இதனால் தான் விலகினேன்
இது தொடர்பாக நான் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். ஆனால் என் குரலை அவர்கள் கேட்கவே இல்லை. இதனால் வேறு வழியின்றி நான் ராஜினாமா செய்துவிட்டேன். பிரச்சினைகளைப் பேசி சரி செய்து கொள்ளலாம் என இப்போது பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள். ஆனால், பிரச்சினை இருந்த சமயங்களில் அவர்களுக்குப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் இல்லை என்பதே உண்மை" என்று தெரிவித்தார்.

புகார்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவாமி பிரசாத் மவுரியா பாஜக தலைமைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சில புகார்களை அனுப்பியதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாகச் சுவாமி பிரசாத் மவுரியா மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் பாஜக தலைமையில் இருந்து வரவில்லை.

பெரும் பின்னடைவு
சமாஜ்வாடி கட்சியை எதிர்கொள்ளவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வாக்குகளைப் பெறவும் சுவாமி பிரசாத் மவுரியா மீதே பாஜக பெரும் நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால், இப்போது, அவர் 4 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இருந்து விலகிவிட்டார். வரும் காலத்தில் மேலும் சில எம்எல்ஏக்களும் சுவாமி பிரசாத் மவுரியாவுடன் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இது முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications