உபி.யில் நாளை 3ம் கட்ட தேர்தல்.. 627 வேட்பாளர்கள் களத்தில் - விறுவிறுப்பாகும் தேர்தல் களம்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மூன்றாம் கட்ட சட்டசபைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 10-ம்தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 14-ம் தேதியும் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் 60.17 சதவீத வாக்குகளும் இரண்டாம் கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகளும் பதிவாகின.
இந்நிலையில் 3-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஹாத்ரஸ், கான்பூர், கான்பூர் ஊரகம், தெஹாத், அவுரயா, கன்னோஜ், எட்டாவா, ஃபரூக்காபாத், ஜான்சி, ஜலோன், லலித்பூர், ஹமீர்பூர், மஹோபா, பெரோஸாபாத், மெயின்புரி, ஏட்டா, காஸ்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
மூன்றாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு க்களை ஏடிஆர் அமைப்பு ஆய்வு செய்தது. அதில், ''உத்தரபிரதேசம் மூன்றாம் கட்ட தேர்தலில் 627 பேர் போட்டியிடுகின்றனர். இதில் முழுமையான தகவல் இல்லாத நான்கு பேரின் வேட்பு மனுக்கள் தவிர, மற்ற 623 பேரின் வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதன்படி மூன்றாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 245 வேட்பாளர்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன.
மூன்றாம் கட்ட தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் 52 பேர் கோடீஸ்வரர்கள், பாஜக 48 பேர் கோடீஸ்வரர்கள், பகுஜன் சமாஜ் சார்பில் 46 பேர். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முறையே 29 மற்றும் 18 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்'' என தெரிவித்துள்ளார்கள்.
இந்த மூன்றாம் கட்ட தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் என முக்கிய நட்சத்திரங்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.












Click it and Unblock the Notifications