உ.பி. சட்டசபை தேர்தல்: இன்று 2-ம் கட்ட வாக்குப் பதிவு- 55 தொகுதிகளில் 586 வேட்பாளர்கள்!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் இன்று 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் 55 தொகுதிகளில் மொத்தம் 586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
Recommended Video
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே அதிக இடங்களைக் கொண்ட சட்டசபை உ.பி. மாநிலம்தான்.
தேர்தல் மாநிலங்களில் தொடர்ந்து குறையும் கொரோனா.! பிரசாரங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு
7 கட்ட தேர்தல்
இம்மாநிலத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தது. இதன் முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி இருந்தன. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் பெரும்பான்மை வாக்காளர்களாக உள்ள பகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.
இன்று 2-ம் கட்ட தேர்தல்
இதனைத் தொடர்ந்து இன்று பிப்ரவரி 14-ந் தேதி 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. சஹாரான்பூர், மொரொதாபாத், பைரேலி, ராம்பூர், பிஜ்னோர், அம்ரோஹா, சம்பல், புதான், ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தனித்தொகுதிகள் 9. இத்தேர்தலில் மொத்தம் 2,01,42,441 பேர் வாக்காளர்கள். இவர்களில் 1,07,61,476 பேர் ஆண் வாக்காளர்கள். 93,79,704 பேர் பெண் வாக்காளர்கள். 1,261 பேர் மூன்றாம் பாலினத்தவர். இத்தொகுதிகளில் சனிக்கிழமை மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. அனைத்து வாக்குகளும் மார்ச் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
உ.பி. கள நிலவரம்
2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இம்முறை 200க்கும் அதிகமான இடங்களைத்தான் பாஜகவால் பெற முடியும் என்கின்றன கருத்து கணிப்பு. களத்தில் பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியைத் தரும் என்றும் அக்கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பாஜக, சமாஜ்வாதி கூட்டணிகள்
பாஜக தலைமையில் ஜாதிய கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக்தள் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், ஓவைசியின் மஜ்லிஸ்ட் கட்சி ஆகியவை தனித்து களம் இறங்கி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கள முகமாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சரவை படை பரிவாரங்கள் களத்தில் இறங்கி பிரசாரம் செய்தன.