சீரான தொழில் வளர்ச்சியை நோக்கி சீரான வேகத்தில் உத்தரப் பிரதேசம்! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசம் சீரான தொழில் வளர்ச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நேற்று பிரக்யாராஜில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றியிருந்த யோகி ஆதித்யநாத் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, "இயற்கை சமநிலையை விரும்புகிறது. யாரும் இங்கு பெரிய ஆட்கள் கிடையாது. இந்தியாவை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேசம் ஒரு புன்னிய பூமி. இங்கு கலவரங்கள், மாஃபியாக்கள், வன்முறைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் வன்முறையை ஆதரித்திருக்கலாம். ஆனால் எங்களால் இதனை ஆதரிக்க முடியாது. கடந்த 6 ஆண்டுகளில் ஒரேயொரு இடத்தில் கூட வன்முறை நடைபெறவில்லை. சட்டம் ஒழுங்கு ஒருபுறம் எனில் மறுபுறம் நாங்கள் சீரான தொழில் வளர்ச்சியை இலக்காக கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்குதான். இந்த மாநாடு மூலம் சுமார் ரூ.32 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உத்தரப் பிரதேசத்தை நோக்கி வந்திருக்கிறது.
தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப சமூக வளர்ச்சிக்கும் இந்த அரசு சரியாக திட்டமிட்டு இயங்கி வருகிறது. மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும். இதற்காக ரூ.12,650 கோடியும், புதியதாக அமைய உள்ள 14 மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.2491 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சாலை வசதிகளை மேம்படுத்தவும் பரவலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 60,397 கி.மீ சாலைகள் பள்ளங்களற்ற சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது.
14,144 கி.மீ சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே 2022-2023 நிதியாண்டில் மொத்தம் 60,397 கி.மீ நீளம் கொண்ட சாலைகள் பள்ளமற்றதாக மாற்றப்படும். தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை பராமரிக்க ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாதான் பால் உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. இந்தியாவில் உத்தரப் பிரதேசம்தான் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. எனவே பால் சங்கங்களை வலுப்படுத்தி, புத்துயிர் அளிக்கும் திட்டத்துக்கு ரூ.86.95 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 'நந்த் பாபா' பால் திட்டத்தை செயல்படுத்த ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது உத்தரப் பிரதேசத்தின் ஒரே இலக்கு 1 டிரில்லியன் பொருளாதாரம்தான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications