“பள்ளி கல்வியை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன!” யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: பள்ளி கல்வித்துறையை பலப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் நல்ல பலனை கொடுத்திருப்பதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி அதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று 6 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. காரணம் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியில் இருந்தது கிடையாது. அந்த வகையில் யோகி புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

மறுபுறம் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் யோகி தலைமையில் பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி யோகியின் செல்வாக்கை மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் யோகி ஆதித்யநாத் தீவிரம் காட்டி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "இதற்கு முன்னர் இருந்த அரசு மாஃபியாக்களை வளர்த்து அதன் மூலம் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது. ஆனால், தற்போதைய பாஜக அரசு மக்களுக்காக பணியாற்றுகிறது. அதனால்தான் முதலீட்டாளர்களை நமது மாநிலத்திற்கு யோகி கொண்டு வந்திருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஏனெனில் வழக்கமாக இந்த மாநாடு மும்பை அல்லது டெல்லியில்தான் நடக்கும்.
ஆனால் லக்னோவில் முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளது. இதற்கு யோகிதான் காரணம். முந்தைய ஆட்சியாளர்கள் செய்ய முடியாததை தற்போதைய ஆட்சியில் நிகழ்த்தி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல யோகி ஆதித்யநாத், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 'நிபுன்' அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

'நிபுன்' அந்தஸ்து என்றால், 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு முழுமையாக வழங்கியிருக்க வேண்டும். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" என்று கூறியுள்ளனர். இதனைத தொடர்ந்து பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "பள்ளி கல்வி துறையை பலப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலனை தந்துள்ளன. பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு இந்த மாற்றங்கள் நிச்சயம் வியப்பை ஏற்டுபடுத்தும். மாணவர்களின் நலனில் இந்த அரசு எப்போதும் சமரசம் செய்துகொள்ளாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications