காலை உணவுத் திட்டம்.. நாளொன்றுக்கு ஒரு மாணவருக்கு ரூ.12.75 செலவு.. மொத்தம் எவ்வளவு?
மதுரை: அரசுத் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு ஒரு மாணவருக்கு ரூ.12.75 செலவு செய்யப்பட இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது'

எனக்கு அதிர்ச்சி
நான் சென்னையில் அடிக்கடி, நம்முடைய மாநகராட்சிப் பள்ளி, அரசுப் பள்ளிகளுக்கு ஆய்வு மேற்கொள்ளும்போது, அங்கே இருக்கக்கூடிய பிள்ளைகளைப் பார்த்து, என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டு, ஏன் சோர்வாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். சாப்பிடவில்லையா என்று சாதாரணமாக கேட்டேன். வழக்கமாக கேட்கிறமாதிரி, காலையில் எப்போதும் நாங்கள் சாப்பிடுவதில்லை, அப்படியே பள்ளிக்கூடத்திற்கு வந்து விடுவோம், அப்படி என்று சொன்னவுடன் எனக்கு அதிர்ச்சியாக போனது.

உடனே உத்தரவிட்டேன்
உடனே, நான் அதிகாரிகளை ஆலோசித்த போது, நிறைய பிள்ளைகள் காலையிலேயே சாப்பிடாமல் தான் வருகிறார்கள் என்ற தகவலை அதிகாரிகள் சொன்னார்கள். அப்படியானால் காலை உணவுத் திட்டத்தை நாம் தொடங்கியாக வேண்டும் என்று நான் உத்தரவிட்டேன். பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய பிள்ளைகள் பட்டினியாக வைத்து அவர்களுக்கு பாடம் சொல்லித் தரக் கூடாது என்று நினைத்தேன்.

ரூ.12.75 காசு
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்படி நாள்தோறும் முதல்கட்டமாக 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட இருக்கிறது.1,545 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் முதல்கட்டமாக பயனடைய இருக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 12 ரூபாய் 75 காசு செலவு செய்யப்பட இருக்கிறது. செலவு என்பதை நிர்வாக மொழியில் சொல்கிறேன்.

மிகப் பெரிய பொறுப்பு
ஒரு மாணவருக்கு இன்று வழங்கும் உணவின் மதிப்பு 12 ரூபாயாக இருக்கலாம். ஆனால், அதனை உண்டு, சிறப்பான கல்வி கற்கக்கூடிய அந்த மாணவர் நாளைய தினம் மிகப்பெரிய பொறுப்பில் வந்து உட்கார்ந்தால் அவர் மூலமாக இந்தச் சமூகம் அடையும் பயன் என்பது அளவிட முடியாதது. என்னைப் பொறுத்தவரை கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும், பசிப்பிணி போக்கவும் உருவாக்கப்படும் திட்டங்கள் எந்த விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை.












Click it and Unblock the Notifications