பெரும் அச்சுறுத்தலா இருக்கு! கட்டாய மதமாற்றத்தை தடுங்க! துறவிகள் மாநாட்டில் பேரூர் ஆதீனம் பரபரப்பு
மதுரை: கட்டாய மதமாற்றம் உலகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் கட்டாய மதமாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் பேசினார்.
விஷ்வ ஹிந்து பரிஷத்-அறவழிக்காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் மதுரை பரவையில் துறவியர் மாநாடு நேற்று துவங்கியது.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆதீனங்கள் பங்கேற்றனர். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் பேசியதாவது:
இந்து சமயம் பெரும்பான்மை மக்களின் சமயமாக உள்ளது. ஆனாலும் இந்து சமயம் புறக்கணிக்கப்படும் நிலை தான் நிலவுகிறது. கோவில்களை தனிவாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என பல ஆண்டுகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது தற்போது வரை பரிசீலிக்கப்படாமல் உள்ளது. கோவில்கள், ஆதீன மடங்களுக்கு சொந்தமான நிலங்களை நெறிமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
கட்டாய மதமாற்றம் என்பது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இது உலகத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதனால் கட்டாய மதமாற்றத்தை தடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது. தாய் மதம் திரும்பும் இந்துக்களுக்கு உரிய உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை செய்ய வேண்டும். அதேநேரத்தில் மதமாற்றத்துக்கு காரணமாக கூறப்படும் சமூக ஏற்ற தாழ்வுகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்'' என்றார்.
இதில் மதுரை ஆதீனம் ஸ்ரீஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசுகையில், ‛‛கோவில்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதற்கு அரசும், அரசியல் தலையீடும் தான் காரணம். இதற்காக பிரதமரிடம் புகார் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்துக்களிடம் ஒற்றுமை ஏற்பட்டால் தான் கோவில்களை மீட்டெடுக்க முடியும்'' என்றார். இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான இன்றும் சாமியார், ஆதீனங்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications