பனிஷ்மெண்டில் தான் தமிழகத்துக்கு ஆளுநராக வந்தார் ஆர்.என்.ரவி! ஒரே போடாக போட்ட கார்த்தி சிதம்பரம்!
மதுரை: நாகலாந்திலிருந்து பனிஷ்மெண்டில் தான் தமிழகத்துக்கு ஆளுநராக வந்தார் ஆர்.என்.ரவி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது என்ன குழப்பம் விளைவித்தாரோ அதே குழப்பத்தை தான் தமிழகத்திலும் அவர் ஏற்படுத்துவதாக கார்த்தி கூறியிருக்கிறார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது;
குழந்தையின்மை சிகிச்சை மையங்கள் தொடங்க வேண்டும்! தமிழக அரசுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம்!
தவறான முடிவு
''நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இதை நடுநிலையாக விசாரித்து ஆராய்ந்து அதன் மூலம் வரக்கூடிய அறிக்கையை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒழுங்கு நடவடிக்கை என்கின்ற பெயரில் வரம்புகளை மீறி ஒரு சட்டமன்ற உறுப்பினர் அதுவும் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரின் வாதத்தை கூட கேட்காமல் நடவடிக்கை எடுத்து இருப்பது தவறான முடிவு என நான் சுட்டி காட்டி இருந்தேன். ''
கிரிக்கெட் விளையாடலாம்
''அதை தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி இதில் தலையிட்டு, தற்போது தீர்வு கண்டிருக்கிறார்கள். இதனால் தற்பொழுது குழப்பம் எதுவும் இல்லை. நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற சம்பவமும் நேற்று எடுக்கப்பட்ட முடிவும் தவறானது. இந்த தவறு அனைத்தையும் அகில இந்திய காங்கிரஸ் திருத்தி விட்டது.மேலும் டெல்லிக்கு சென்ற 11 எம்எல்ஏக்கள் வேண்டுமென்றால் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் விளையாடலாமே தவிர வேறு எதையும் செய்ய முடியாது. ''
எனக்கு விருப்பம்
''3 ஆண்டுகளுக்கு ஒரு முறை காங்கிரஸில் மாநிலத் தலைவர்களை மாற்றுவது தான். தற்போது மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டதால் மாற்றம் வரும். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எனக்கு விருப்பம் இருக்கிறது. இதேபோல் அதற்கான திறமையும் என்னிடம் முழுமையாக உள்ளது என நான் நம்புகிறேன். ''
ஆளுநர் ரவி
''தமிழக ஆளுநர் வரம்பு மீறி செயல்படுகிறார். ஆளுநரின் பின்னணியை பார்த்தால் நாகலாந்தில் நாகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது அதில் படுதோல்வி அடைந்த காரணத்தினால் அங்கிருந்து அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்திற்கு ஆளுநராக அனுப்பி வைத்திருக்கிறார்கள். பிரிவினைவாதிகள் உடன் பேச்சுவார்த்தையில் என்ன குழப்பம் விளைவித்தாரோ அதே குழப்பத்தை தான் தற்போது தமிழகத்தில் ஆளுநர் விளைத்துக் கொண்டிருக்கிறார். எனவே ஆளுநரை மீண்டும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.''