ஆளுநருக்கு ஆதரவாக ஓபிஎஸ் ‘வாய்ஸ்’.. திமுகவுக்கு ஆப்போசிட்டா? “சொன்னதெல்லாம் பொய்யா?” என்னாச்சு?
மதுரை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை திமுக கடுமையாக கண்டித்து வரும் நிலையில், ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக இந்து மதம், சனாதனம், ஆரியம், திராவிடம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். ஆளுநர் பதவியில் இருந்துகொண்டு ஒரு மத சார்புள்ளவராக ஆர்.என்.ரவி பேசுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதையொட்டி, ஆளுநரை திரும்பப் பெறவும் திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக அதிரடி நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது திமுக. இந்நிலையில், ஆளுநர் ரவி டெல்லி சென்றுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு
தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெற வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வலியுறுத்த திமுக திட்டமிட்டுள்ளது. அதற்காக குடியரசுத் தலைவரிடம் தமிழக எம்.பிக்கள் அனைவரின் கையெழுத்தையும் பெற்று மெமோரண்டம் தயார் செய்கிறது திமுக. இதில் பெரும்பாலான திமுக கூட்டணி எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். விரைவில் டெல்லியில் தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர்.பாலு குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனுவை அளிக்க இருக்கிறார்.

ஆளுநர் பேச்சு சர்ச்சை
ஒரு மதத்தை மட்டும் உயர்த்தி, சனாதனம், ஆரியம் குறித்து ஆளுநர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு, பழமைவாத கருத்துகளையும், மதவாதக் கருத்துகளையும் பேசுவது ஆளுநர் ஆர்.என்.ரவி வகிக்கும் பதவிக்கும் அழகல்ல எனவும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே, திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளன

ஆளுநர் பற்றி ஓபிஎஸ்
இந்நிலையில், மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் தனது ஆதரவாளர் இல்ல காதணிவிழா ஒன்றில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஆளுநரை பதவி விலக வேண்டுமென திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஆளுநரின் செயல்பாடு எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல" எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் அளித்த பதில்
தொடர்ந்து, தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. பிரதமர் தமிழகம் வருவதற்கான தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக இல்லை. அப்படி வருவதாக இருந்தால் பிரதமரை சந்திப்பது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறேன்" எனப் பதில் அளித்தார்.

திமுகவுடன் ஓபிஎஸ்?
ஓ.பன்னீர்செல்வம், திமுகவுக்கு இணக்கமாகச் செயல்பட்டு வருகிறார் என எதிர் தரப்பான எடப்பாடி பழனிசாமி அணியினர் குற்றம்சுமத்தி வரும் நிலையில், திமுகவால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றிய கேள்விக்கு, ஆளுநரை பற்றி கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல என திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டிலும், ஆளுநருக்கு ஆதரவாகவும் ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

பாஜக இருக்கிறதே
மாநில அரசுக்கு குடைச்சல் கொடுத்து வரும் ஆளுநருக்கு எதிராக கருத்துச் சொல்வது தவறில்லை என்றாலும், பாஜகவின் தயவு தனக்கு தேவை என்பதாலேயே, ஓ.பன்னீர்செல்வம், ஆளுநரை விமர்சிக்காமல் ஜகா வாங்கியுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். திமுகவுக்கு இணக்கமானவர்தான், ஆனால் ஆளுநர் பற்றி விமர்சித்தால், பாஜக எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதன் காரணமாகவே நழுவியிருக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications