எய்ம்ஸ்...ஒரு செங்கலை வைத்து திமுக அரசியல் செய்தது ஏன் என்பது புரிகிறதா? - வானதி சீனிவாசன்
மதுரை: ஒற்றைச் செங்கலை வைத்து அரசியல் செய்தவர்கள் ஏன் இன்னும் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
மதுரை எய்ம்ஸ் உருவாக ஜப்பான் நிதி தொடர்ச்சியாக வரவேண்டும். இது தெரிந்திருந்தும் எய்ம்ஸை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் செங்கலை கையில் வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார் என்றும் தெரிவித்தார்.
வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம மதுரை வந்தார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 12 ஆம் தேதி மருத்துவக்கல்லூரி திறந்து வைப்பதற்காக தான் பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறினார். அரசு விழாவிற்கு வருகை தரும்போது பாஜகவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக மட்டுமே தற்போது முடிவாகியுள்ளதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மோடிக்கு வரவேற்பு தரவேண்டும்
தமிழகத்திற்குரிய திட்டங்களை பிரதமர் தொடக்கி வைக்க வருகின்ற போது அதை தமிழகத்தின் சார்பாக அனைவரும் வரவேற்க வேண்டும். கடந்த காலத்தில் திமுகவினர் ஆயுத தளவாட கண்காட்சியை பிரதமர் திறந்து வைக்க வரும்போது GoBackModi எனக் கூறினர். ஆனால், அந்தத் திட்டத்தின் மூலமாக ரூ.2000 கோடி முதலீடு நடந்திருப்பதாக சட்டசபையில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

2000 கோடி ரூபாய் முதலீடு
பிரதமரை நீங்கள் திரும்பிப் போ என்று கூறினாலும் கூட அந்தத் திட்டத்தால் 2000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது. இவையெல்லாம் திமுகவினர் இன்று சரியாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறோம் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

பயன்படுத்தாத தமிழகம்
தமிழகத்தை மத்திய அரசு மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்கிறது என்று எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், எந்தெந்த விதத்தில் மாற்றான் தாய் பிள்ளைகளாக பார்க்கிறது என்று அவர்களைபுள்ளிவிபரம் கொடுக்கச் சொல்லுங்கள். உண்மையில், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இரண்டு மூன்று திட்டங்கள் அமல்படுத்த முடியாத நிலையே உள்ளதாக கூறிப்பிட்டார்.
மத்திய அரசு நிதி கொடுத்தால் கூட அதனை சரிவர பயன்படுத்த முடியாத இடத்தில் தமிழகம் இருப்பது வேதனைக்குரியது என்றும் தெரிவித்தார்.

எய்ம்ஸ் தாமதம் ஏன்
தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தொடர்ச்சியாக நிதி உதவி கிடைத்தால் தான் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக ஜப்பானில் இருந்து ஒரு குழு இங்கு வந்து ஆய்வு கொள்வதற்கு தாமதமாகிறது. இது தெரிந்திருந்தும் எய்ம்ஸை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் செங்கலை கையில் வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார்.

7 மாதம் ஆகிவிட்டது
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எய்ம்ஸ் கட்டுமானப் பணியை துவக்கி விட்டார்களா? என்று கேட்ட வானதி சீனிவாசன், 7 மாத காலமாகியும் ஒற்றைச் செங்கலை கையில் வைத்து ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? என்றார். இவர்கள் அரசியலுக்காக ஒற்றைச் செங்கலை வைத்து மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications