அண்டா அண்டாவாக சுட சுட பிரியாணி.. ஆஹா.. பிரசாதம்.. கலக்கிய வடக்கம்பட்டி திருவிழா
மதுரை அருகே முனியாண்டி கோயில் திருவிழாவில் பிரியாணி பிரசாதமாக தரப்பட்டது.
மதுரை: அண்டா அண்டாவாக தயாரான சுடச்சுட, கமகம பிரியாணியை வடக்கம்பட்டி பக்தர்கள் பிரசாதமாக வாங்கி சாப்பிட்டார்கள்! பலர் தூக்குவாளிகளை கொண்டு வந்து ஆசையாக அள்ளிக் கொண்டு போனார்கள்!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி முனியாண்டி கோவில் திருவிழா வருஷா வருஷம் நடைபெறும். இந்த கோயிலில் ஸ்பெஷலே பிரியாணிதான்.
ஏனென்றால் முனியாண்டி சாமிக்கு பிரியாணி என்றால் உயிராம். இந்த முனியாண்டி சாமியை வைத்துதான், மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ் தமிழகமெங்கும் பரவி உள்ளது.
முனியாண்டி விலாஸ்
இந்த கிராமத்திலிருந்துதான் முதன்முதலாக முனியாண்டி விலாஸ் ஹோட்டல் வைப்பது ஆரம்பமானது. இப்போது தமிழகம் இல்லாமல், சிங்கப்பூர், மலேசியா என பல இடங்களில் கடைகள் விரிவடைந்துள்ளன. முனியாண்டி விலாஸ் ஓட்டல் வைத்திருப்பவர்கள் எப்போதும் எல்லா நலனும் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த வருடம்தோறும் விழா நடக்கிறது.
முதல் பில் தொகை
இந்த திருவிழாவின் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், எங்கெல்லாம் முனியாண்டி ஹோட்டல் செயல்படுகிறதோ அந்த ஓட்டலின் முதல் பில் தொகையை முனியாண்டி சாமிக்கு உண்டியலுக்கு எடுத்துவைத்து விடுவார்கள். இப்படி சேரும் தொகையை வைத்துதான் இந்த திருவிழாவே நடத்துகிறார்களாம்.
பூத்தட்டு வழிபாடு
84-வது ஆண்டாக இந்த வருடமும் திருவிழா களை கட்டியது. இதற்காக பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டி, பால்குடம் ஏந்தி முனியாண்டி சாமிக்கு அபிஷேகம் செய்தார்கள். பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாகச் சென்று பொங்கல் வைத்து முனியாண்டி சுவாமியை வழிபட்டனர்.
2 ஆயிரம் கிலோ அரிசி
ஒருநாள் முன்னதாகவே ஆடுகள், கோழிகளை ஓட்டிவந்து கோயிலுக்குள் காணிக்கையாக விட்டு விடுவார்கள். அதன்படி 200 ஆடுகள், 300-க்கும் அதிகமான சேவல்கள் கோயிலுக்குள் விடப்பட்டன. இவைகளை வைத்து 2 ஆயிரம் கிலோ அரிசி போட்டு விடிய விடிய பிரியாணி தயாரானது.
தூக்குவாளி
கிட்டத்தட்ட 100 அண்டாக்களில் சுவையான பிரியாணி வடக்கம்பட்டி முழுவதும் மூக்கை துளைத்தது. விடிகாலை பிரியாணி ரெடி ஆனதும் முதல் ஆளாக முனியாண்டிக்கு படைக்கப்பட்டது. அதன்பிறகு 20 ஆயிரம் பேருக்கு இந்த பிரியாணி வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நிறைய பேர் தூக்குவாளியை கொண்டு வந்திருந்து அதில் பிரியாணியை வாங்கிகொண்டு போனார்கள்.