ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக பூத் முகவர்.. தட்டித் தூக்கிய மதுரை போலீசார்.. 4 பிரிவுகளின் கீழ் வழக்கு
மதுரை : மதுரை மாவட்டம் மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி சர்ச்சையில் சிக்கிய பாஜக பூத் முகவர் கிரிராஜன் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் அமைதியான முறையில் நிறைவடைந்தது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்ற நிலையில் மதுரை திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு போன்ற திடீர் சர்ச்சைகளும் ஏற்பட்டது.
மேலூரில் அதிர்ச்சி
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு அல்அமீன் பள்ளியில் வாக்களிக்கச் சென்ற இஸ்லாமிய பெண் ஒருவரை பாஜக நிர்வாகி ஹிஜாபை அகற்றக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட அந்த வாக்குச் சாவடியில் ஏஜெண்டாக இருந்த கிரிராஜன் என்பவர் வாக்களிக்க வந்த அப்பகுதியைச் என்ற இஸ்லாமிய பெண் வாக்காளர் ஒருவரின் ஹிஜாப்பைஅகற்றுமாறு கூறினார். இதற்கு அந்தப் பெண் வாக்காளர் மறுப்பு தெரிவித்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஹிஜாப்புக்கு எதிர்ப்பு
குறிப்பிட்ட அந்த பாஜக முகவரை வெளியேற்ற வேண்டும் என கூறிய வாக்குப்பதிவு அதிகாரிகள் வாக்குப்பதிவை நிறுத்தி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து மற்ற கட்சி முகவர்களும் வாக்குப்பதிவை மையத்தை விட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இதனை வாக்குப் பதிவு மையத்தை விட்டு வெளியேறுமாறு கூறினர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் 30 நிமிடத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் இவ்விவகாரம் பரவியது.
ஆணையர் விளக்கம்
திமுக மக்களவை எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும் இஸ்லாமிய பெண்ணுக்கு ஆதரவாக பேசியதோடு, பாஜக முகருக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் பாஜக முகவர் வெளியேற்றப்பட்ட பிறகு, மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இவ்விவகாரம் குறித்து பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் இந்தியா மதச்சார்பற்ற நாடு எனவும் அனைத்து வாக்காளர்களும் அவர்கள் மத நம்பிக்கையை பின்பற்ற உரிமை உள்ளது எனவும் மத அடையாளங்களுடன் வாக்குப்பதிவு மையத்திற்கு வரக்கூடாது என எந்த நிபந்தனையும் இல்லை எனவும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை பெறப்பட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
பாஜக முகவர் கைது
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தயார் செய்து வரும் நிலையில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக அவர் மீது அங்கு தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் புகார் அளித்தனர் இதையடுத்து அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் பாஜக முகவர் கிரிராஜனை சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.