நேரமாச்சு! ஹைடெக் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பதிவு செய்ய இன்றே கடைசி!
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் இன்று மதியம் 12 மணி வரை தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து, அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் பிரமாண்டமான முறையில், கண்கவர் வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.44 கோடியில் மூன்று தளங்களுடன் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அமர பாதுகாப்பான கேலரிகள் ஹைடெக் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடம், காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், தற்காலிக விற்பனைக் கூடம், பொருட்கள் பாதுகாப்புப் பெட்டகம், தங்கும் அறைகள் உள்ளன.
16,921 சதுர அடியில் அமைக்கப்படும் முதல் தளத்தில் விஐபிகள் அமரும் அறை மற்றும் அவர்கள் தங்கும் அறைகள், உணவு வைப்பு அறைகள் இடம்பெற்றுள்ளன. 9,020 சதுர அடியில் அமைக்கப்படும் இரண்டாம் தளத்தில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வைப்பறை அமைக்கப்பட்டுள்ளது. 1,140 சதுர அடியில் அமைக்கப்படும் மூன்றாம் தளத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
"கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானம்" என பெயரிடப்பட்டுள்ள இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 24ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ஜல்லிக்கட்டு அரங்கத்தின் திறப்புவிழாவையொட்டி ஜனவரி 24ஆம் தேதி முதல் ஜனவரி 28 வரை 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் அங்கு நடைபெற உள்ளது. தற்போது இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான முன்பதிவு நடந்து வருகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி madurai.nic.in தளத்தில் நேற்று நண்பகல் 12 மணி முதல் இன்று ஜனவரி 20 நண்பகல் 12 மணி வரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகள் உடன் உரிமையாளர், உதவியாளர் என இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு.
உடற்தகுதிச் சான்றுடன் மாடுபிடி வீரர்களும், காளைகளின் மருத்துவச் சான்றுடன் அதன் உரிமையாளர்களும் பதிவு செய்ய வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் போட்டியாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதனைக் கொண்டே, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்ய இன்று மதியம் 12 மணி வரை நேரம் உள்ளதால், காளையர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் விரைந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications