சரிந்து விழுந்த மண்..புதைந்த உயிர்! பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்! 3 பேர் மீது பாய்ந்தது வழக்கு
மதுரை : மதுரை பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தியதாக ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
மதுரை மாநகராட்சி பாதாள சாக்கடை பணியானது விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிக்கு ரூ.500 கோடிக்கு நிதி ஒதுக்கி பாதாள சாக்கடை திட்டம் பணிகள் 28 வார்டுகளிலும் நடைபெற்று வருகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மதுரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரக்கூடிய நிலையில்மதுரை மாநகராட்சி 2ஆவது வார்டு அசோக்நகர் 2ஆவது தெரு பகுதியில் பாதாளசாக்கடை தோண்டும் பணியில் நடைபெற்று வந்தது.

பாதாளசாக்கடை பணி
நேற்று காலை 11 மணி அளவில் 5 ஊழியர்களுடன் நடைபெற்று வந்த பணியின் போது ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் கொத்துக்காடு பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற தொழிலாளி 16 அடி ஆழத்தில் உள்ள குழிக்குள் இறங்கி வேலை பார்த்தபோது திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது . அப்போது அவருடன் இருந்த மற்றொரு தொழிலாளரும் சிக்கிய நிலையில் இடுப்பளவு மண்ணில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து சக தொழிலாளி தானாக மண்ணை தோண்டி வெளியில் வந்த நிலையில் சக்திவேல் தனது இடுப்பில் இருந்த மண்ணை அகற்ற முயன்றுள்ளார்.

தொழிலாளி பலி
மேலும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்க முயன்றுள்ளனர். ஆனால் பாதாளசாக்கடை பள்ளத்தின் அருகிலேயே இருந்த பெரிய அளவிலான குடிநீர் இணைப்பு குழாயும் உடைந்து தண்ணீர் பள்ளத்திற்குள் புகுந்தது. இதனையடுத்து சிறிதுநேரத்திலயே தொழிலாளியின் உடல் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியதோடு மண் சரிவில் புதைந்தது. இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்றிய பின் 4மணி நேர போராட்டத்திற்கு பின் பொக்லென் இயந்திரத்தின் மூலமாக உடலில் கயிறு கட்டி மீட்கப்பட்டது.

பரபர குற்றச்சாட்டு
இதனையடுத்து அவரது உடலானது அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக கொண்டுசெல்லப்பட்டது.உயிரிழந்த சக்திவேலுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் என இரண்டு குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விளாங்குடி பகுதியில் இதேபோன்று பாதாளசாக்கடை பணியின்போது மண் சரிந்து தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற நிலையிலும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத நிலையில் மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

வழக்குப் பதிவு
தொழிலாளி மண் சரிவில் சிக்கிக் கொள்ளும் பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ள நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் தொழிலாளருக்கான உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் அஜாக்கிரதையாக இருந்ததாக ஒப்பந்ததாரர் அசோக், மேலாளர் சுபாஷ் சந்திர போஸ், மேற்பார்வையாளர் ரவிக்குமார் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications