நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. சென்னை மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமீன் மறுப்பு
Recommended Video
மதுரை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் சென்னை மாணவர் உதித் சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் உதித் சூர்யா(19).

இவர் 2019-2020-ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி அதற்கான மதிப்பெண் பட்டியலுடன் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் இவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானது. இதையடுத்து கண்டனூர் போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள உதித் சூர்யாவையும் அவரது குடும்பத்தினரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உதித் சூர்யா மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தன்னிடம் விசாரணை நடத்தி மனஉளைச்சல் ஏற்பட்டதால் தான் செப்.9-ஆம் தேதியே கல்லூரியிலிருந்து விலகிவிட்டதாகவும் தற்போது தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி விசாரணைக்கு அழைத்தால் உதித் சூர்யா ஆஜராவாரா என கேள்வி எழுப்பியிருந்தார்.
அப்போது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உதித்சூர்யாவுக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் முன்ஜாமீன் கோரியும் வாதம் செய்தார். அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்ததோடு உதித் சூர்யாவின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தார். மேலும் செவ்வாய்க்கிழமைக்குள் சிபிசிஐடி முன் உதித் சூர்யா ஆஜராக வேண்டும் என்றும் செவ்வாய்க்கிழமை முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications