ஆட்சிக்கு எதிரானவரை அரவணைத்த ஸ்டாலின்! - நெடுமாறன் சந்திப்பு சொல்லும் செய்தி என்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு. பழ.நெடுமாறனை, அவரது வீடு தேடிச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தது தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹைலைட் நியூசாக மாறி இருக்கிறது.

மதுரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுரை சென்றிருந்தார். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மலர்மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 CM M.K. Stalin visited Tamil Desiya Iyakkam founder Pazha Nedumaran at his residence in Madurai

அதற்கு முன்னதாக விடுதலைப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களுக்கு மதுரை தெப்பக்குளத்தில் மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் அப்போது அவர் மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கிவைத்தார்.

மேலும் மதுரை தொண்டி சாலையில் அப்பல்லோ சந்திப்பில் ரூ. 150.28 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் மற்றும் வட்ட வடிவு சந்திப்பு அமைக்கும் கட்டுமானப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

 CM M.K. Stalin visited Tamil Desiya Iyakkam founder Pazha Nedumaran at his residence in Madurai

முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், "சமூக உயர்வுக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் பாடுபட்ட அவரது பணிகளைப் பாடமாகக் கொண்டு உயர்வடைவோம்" என்று தெரிவித்திருந்தார்.

மதுரையில் பல்வேறு பரபரப்பு நிகழ்ச்சிகளின் இடையே மதுரையிலுள்ள தனது வீட்டில் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் ஓய்வு எடுத்து வரும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

 CM M.K. Stalin visited Tamil Desiya Iyakkam founder Pazha Nedumaran at his residence in Madurai

அரசியல் களத்தில் திமுகவுக்கு எதிராக இயங்கிவந்த மூத்த அரசியல்வாதி பழ.நெடுமாறனை, முதலமைச்சர் சென்று சந்தித்தது ஹைலைட் செய்தியாக மாறி இருக்கிறது.

குறிப்பாக இலங்கையில் நடந்த முள்ளி வாய்க்கால் போருக்குப் பிறகு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை விமர்சித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார் பழ.நெடுமாறன்.

மேலும் அவர், சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு மிக நெருக்கமானவராக இருந்ததுடன் அதிமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார். ஆகவே, திமுகவுக்கும் நெடுமாறனுக்கு இடையே சுமுகமான உறவு என்பது இல்லாமல் இருந்து வந்தது. ஒருகாலத்தில் நெடுமாறனுடன் இணைந்து செயல்பட்டு வந்த சுப.வீரபாண்டியன் போன்றவர்கள்கூட அவரைவிட்டு விலகியே அரசியல் செய்து வந்தனர்.

 CM M.K. Stalin visited Tamil Desiya Iyakkam founder Pazha Nedumaran at his residence in Madurai

சமீப காலமாகவே நெடுமாறன் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்துவருவதாகவும், பிரதமர் மோடியின் அரசியலை அவர் விமர்சிக்க மறுப்பதாகவும் திமுகவினர் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஈழ ஆதரவாளர்கள் பலரும்கூட, நெடுமாறனை விட்டு விலகியே அரசியல் செய்துவருகின்றனர்.

இந்நிலையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழைய அரசியல் முரண்பாடுகளை எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, நெடுமாறனின் இல்லம் தேடிச் சென்று அவரை நலம் விசாரித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் ஸ்டாலினைப் பாராட்டிக் கருத்திட்டு வருகின்றன. மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தவரை வீடு தேடிச் சென்று முதல்வர் சந்தித்தது ஒரு நாகரிகமான அரசியல் பண்பு எனப் பலரும் குறிப்பிட்டுக் கருத்திட்டு வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தன் வீடு தேடி வந்து நலம் விசாரித்தது குறித்து பழ.நெடுமாறன் சில பழைய சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ஸ்டாலினுடன் தனக்கு இருந்த நட்பு எத்தகையது என்பதை விளக்கியுள்ளார்.

 CM M.K. Stalin visited Tamil Desiya Iyakkam founder Pazha Nedumaran at his residence in Madurai

சந்திப்பு பற்றி நெடுமாறன், "மதிப்புக்குரிய முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு வந்து எனது உடல்நலம் பற்றி விசாரித்தார். அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தன. அதற்கு நடுவில் என்னை வந்து சந்தித்தது என்னுடைய உள்ளதை நெகிழச் செய்திருக்கிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் நான் இருந்தேன்.

அப்போது வேறு ஒரு போராட்டத்தில் முதல்வர் ஸ்டாலினையும் அவரது கட்சித் தோழர்கள் சிலரையும் கைது செய்து அதே சிறையில் கொண்டுவந்து அடைத்தார்கள். அதனால் ஒரே பிளாக்கில் நானும் அவரும் சேர்ந்து இருந்தோம். அந்த வாய்ப்பு எங்கள் இருவருக்கும் அதனால் கிடைத்தது. கிட்டத்தட்ட 15 நாள்கள் அவர் சிறைச்சாலையில் இருந்தார்.

அந்தத் தருணத்தில் நான் அவருடன் பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடி இருக்கிறேன். அதன்பிறகு பல்வேறு காலகட்டங்களில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், அவர் என் மீது அன்பும் மதிப்பும் காட்டி வந்திருக்கிறார்.

 CM M.K. Stalin visited Tamil Desiya Iyakkam founder Pazha Nedumaran at his residence in Madurai

எனக்கு உடல்நிலை முடியாத இந்தச் சூழ்நிலையில், அவர் தனது சக அமைச்சர்களோடு இல்லம் தேடி வந்து சந்தித்தது, ஆறுதல் கூறியது என்று மறக்க முடியாத நினைவுகள். அவருக்கு என்னுடைய நன்றியை என்றைக்கும் உரியது" என்றார்.

இந்த உணர்ச்சிகரமான சந்திப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "மதுரைக்குச் சென்றிருந்தபோது, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் உடல் நலிவுற்றிருக்கும் செய்தியறிந்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.

#POTA-வில் கைது செய்யப்பட்டு அவர் கடலூர் சிறைச்சாலையிலிருந்தபோது, நான் வேறொரு போராட்ட வழக்கில் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். அப்போது ஒரே பிளாக்கில் இருந்த நாங்கள் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டதை நினைவுகூர்ந்து பகிர்ந்துகொண்டோம்.

அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 29.06.23 அன்று இரவு 7 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாகத் தெரிவித்து ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்திருந்தார். அவரது நடவடிக்கை குறித்து பழ.நெடுமாறன், "நள்ளிரவில் தடுமாறிய ஆளுநர்" என்று அப்போது திமுகவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்ட பதிவில், "அமைச்சரை நியமிப்பதற்கும், நீக்குவதற்கும் உரிய அதிகாரத்தை அரசியல் சட்டம் மாநில முதல்வருக்கும், இந்தியத் தலைமை அமைச்சருக்கும் மட்டுமே வழங்கியுள்ளது.

வேறு யாரும் இதில் தலையிட இயலாது. "தனக்கும் தெரியாது; சொன்னாலும் புரியாது" என்ற பழமொழிக்கு முற்றிலும் ஏற்றவர் ஆளுநர் ரவியே என்று கூறினால் மிகையாகாது.

ஒரு அமைச்சரை நீக்குவதற்கு முன்பு அதற்குரிய அதிகாரம் தனக்கு இருக்கிறதா? என்பதை உரியச் சட்ட அறிஞர்களிடம் கேட்டாவது ஆளுநர் முடிவெடுத்திருக்கவேண்டும்.

நீக்குவதற்கான ஆணையைப் பிறப்பித்த பிறகு நள்ளிரவில் ஏதோ காரணத்தினால் ஏற்பட்ட தடுமாற்றத்தின் விளைவாகத் தனது ஆணையைத் தானே நிறுத்தி வைக்கிறார்" என்று கூறி இருந்தார்.

"இது ஓட்டுப் போடாதவர்களுக்குமான ஆட்சி" என்று அடிக்கடி சொல்கிறார் ஸ்டாலின். இந்த நெடுமாறன் சந்திப்பு நமக்குச் சொல்லும் செய்தியும் அதுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+