மதுரையில் பிரமாண்ட மேம்பாலம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!
மதுரை: மதுரையில் உள்ள திருநகர் மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மதுரை தொண்டி சாலை அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் தொடங்கி ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு வழியாக மதுரை சுற்றுச் சாலையில் இணைந்து அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் முடிவடைகிறது. இந்தச் சாலை மதுரை மாவட்டத்தையும், சிவகங்கை மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலை ஆகும்.

இந்தச் சாலையில் அதிகமான கல்வி நிறுவனங்கள் அமையப் பெற்றுள்ளன. மேலும் போக்குவரத்துச் செறிவு அதிகமாக உள்ள காரணத்தினால் இப்பகுதியில் உள்ள மூன்று சந்திப்புகளிலும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவி வந்தது.
பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையிலும் நெரிசலின்றி வாகனங்கள் செல்லும் வகையிலும் புதிதாக மேலமடை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் மதுரை தொண்டி சாலை, கோரிப்பாளையம் முதல் சுற்றுச் சாலை வரை போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும்.
4 வழிச்சாலையாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருந்தார். 950 மீட்டர் நீளமுள்ள இந்த முக்கியமான மேம்பாலத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்து வெள்ளையரிடம் இருந்து சிவகங்கையை மீட்டு சிறப்பான ஆட்சி புரிந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் புதிய மேம்பாலம் மூலம் பஸ்கள், லாரிகள், தனியார் வாகனங்கள், தினசரி இந்தச் சாலையில் பயணிகள் அனைவரது பயண நேரமும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அப்பல்லோ சந்திப்பு பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த கடும் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும் என்று மதுரை மக்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய மேம்பாலத்தில் ஆவின் பால் பண்ணையில் இருந்து மேலே ஏறுகின்ற மற்றும் அண்ணாநகர், கோமதிபுரம் பகுதியில் இருந்து இறங்குகின்ற பாலத்தின் இரு பக்கங்களிலும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
குறிப்பாக, பாரம்பரிய கலைகளான பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கீழடி இரண்டாம் கட்ட அகழாய்வு நினைவுறுத்தும் செங்கல் கட்டுமானம், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் காட்சி, ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் வீரன், ஜல்லிக்கட்டு காளை, ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை செலுத்தும் பெண், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஆகிய ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
மதுரையின் மற்றொரு அடையாளமாக திகழும் பரோட்டா கடை, பாண்டிய நெடுஞ்செழியன் இடம் நீதி கேட்ட கண்ணகி, கண்ணகி அணிந்த சிலம்பு, ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வென்ற வீரன், காந்தி அருங்காட்சியகம், அம்மன் சன்னதி, தேரோட்டம், நாட்டுப்புற தெய்வமான கருப்பசாமி என பல்வேறு கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications